பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

159



அது அரசியல் ரீதியாக சரியாக இருக்கும். திராவிட இயக்க எதிர்ப்பு என்றால் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து கொண்டு ஒரு கட்சிக்கு எதிர்ப்பு என்ற இயக்கத்தை நடத்தக்கூடாது. ஆகவே இதை நீங்களே நடத்துங்கள். நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார்.

“அப்படியானால் ம.பொ.சி. அவர்களைக் கேட்கட்டுமா?” என்றேன். “சரியான பொருத்தமானவர்தானே. உடனே வேண்டியதை அவரை ஆலோசித்துச் செய்யுங்கள்,” என்றார். நான் தலைவர் காமராஜ் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். வீட்டில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து காத்துக் கொண்டிருந்தார்.

போலீஸ் கமிஷனர் கூட்டிக் கொண்டு வரச் சொன்னதாகச் சொன்னார், கமிஷனரைப் போய்ப்பார்த்தேன். மயிலாப்பூரில் நடைபெற்ற விஷயங்களைச் சொன்னேன். “ஆட்களை ஞாபகமிருக்கிறதா?” என்று கமிஷனர் கேட்டார். “ஞாபக மிருக்கிறது” என்றேன். “அப்படியானால் கலாட்டா செய்த பகுதி வழியாக மீண்டும் செல்லுங்கள். கலாட்டா செய்தவர்கள் தட்டுப்பட்டால் அவர்களைக் கூப்பிட்டு வம்பிழுங்கள்” என்றார் போலீஸ் கமிஷனர். அவர் சொன்னபடியே செய்தேன்.

கலாட்டா செய்த லோகநாதனைக் காணோம். ஆனால் மற்றவர்கள் இருந்தார்கள். மீணடும் என்னை வந்து சுற்றிக் கொண்டார்கள். அப்போது சாதாரண உடையில் (மப்டியில்) இருந்த போலீசார் பலர் நாலாபக்கமிருந்தும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மேற்படி கலாட்டாக்காரர்களைச் செம்மையாக உதைத்துப் போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

என்னைப் போலீஸ் கமிஷனர் தன் வண்டியில் ஏற்றி என் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். இரவு 10 மணி இருக்கும்.