பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

சொன்னால் நம்பமாட்டீர்கள்



நானும் கிங்காங்கும் கலந்து பேசினோம். எனது யோசனையை கிங்காங் ஒப்புக் கொண்டார். அதன்படி அந்தச் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் பம்பாயில் உள்ள பெரிய கடைத்தெரு ஒன்றுக்கு நானும் கிங்காங்கும் சென்றோம்.

பெரிய கடை ஒன்றுக்குள் நுழைந்தோம். கிங்காங் சில கண்ணாடி டம்ளர்கள் மற்றும் வேறுசில சாமான்கள் வாங்கினார்.

அச்சமயம் பார்த்து தாராசிங் அக்கடைக்குள் நுழைந்தார். தாராசிங்கைப் பார்த்ததும் கிங்காங் தாவிக் குதித்து, ‘இந்திய நாயே, என்னைத் தொலைத்து விடுவதாகச் சொன்னாயாமே’ என்று தாராசிங்கைத் தூக்கி எறிந்தார். சாமான்கள் உருண்டன. பறந்தன.

தாராசிங் எழுந்து நின்று, ‘ஹங்கேரிப் பன்றியே!’ எங்கள் நாட்டில் வந்து என்னைக் கேவலப்படுத்துகிறாயா?

உன்னைப் பாரத மண்ணிலேயே சமாதி வைக்காமல் விடமாட்டேன்!’ என்று கிங்காங் மேல்பாய, கிங்காங் தாராசிங் மேல்பாய, பெரிய மோதல் உண்டாகிவிட்டது.

இதைப் பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் கூடிவிட்டார்கள். அதற்குள் மற்ற மல்யுத்த வீரர்களை நாஸ் அவர்கள் காரில் கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் கிங்காங் தாராசிங்கைப் பிரிக்க மிகவும் சிரமப்பட்டார்கள்.

ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றில் தாராசிங் ஏறி நின்று கொண்டு கூடியிருந்த மக்களிடம் ‘பாரத நாட்டு மக்களே ஹங்கேரியிலிருந்து வந்திருக்கும் ஒரு மாமிசப் பிண்டம் என்னை மல்யுத்தப் போட்டியில் ஜெயித்து என் ரத்தத்தைக் குடிப்பேன் என்று சபதம் செய்திருக்கிறான்.