பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

175



நான் அவனை டார் டாராகக் கிழித்து பாரத மண்ணிலே புதைப்பேன். இந்தியாவை கேவலப்படுத்தியவனைச் சும்மாவிடமாட்டேன். நாளை ஞாயிறு அன்று எனக்கும் அவனுக்கும் மல்யுத்தம் நடக்கப்போகிறது.

அதில் அவனை ஒரே அடியில் வீழ்த்தி அவன் பிணத்தின் மீது நின்று வெற்றி வாகை சூடுவேன், ஜெய்ஹிந்த் என்று ஆவேசமாகப் பேசிவிட்டு ஜீப்பில் சென்று விட்டார்.

வேறு ஒரு ஜீப்பில் வந்த கிங்காங்கைப் பார்த்து மக்கள் கை கொட்டிச் சிரித்தார்கள். உடனே கிங்காங் மக்களைப் பார்த்து காரித்துப்பி, ‘மானங்கெட்ட இந்தியர்களே! யாரைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள்.

உங்கள் தாராசிங் குடலை உருவி நாளைக்கு நான் மாலையாகப் போட்டுக் கொண்டு ஹங்கேரி நடனம் ஆடுவேன்’ என்று சொல்லி மற்றும் மக்களுக்குக்கோபம் வருவது போல சில வார்த்தைகளைச் சொல்லித் திட்டி, அடிக்கடி மக்கள் மீது எச்சிலைத் துப்பி கலாட்டா செய்து மக்கள் அவரை அடிக்க ஓடிவர ஜீப்பில் வேகமாகச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர் நானும் திரு.நாஸ் அவர்களும் கடைக்காரரிடம் உடைந்த சாமான்களுக்கு பில் போடச் சொன்னோம். பில் ரூ.17000/- வந்தது. பணத்தைக் கட்டி விட்டுச் சென்றோம்.

சனிக்கிழமை அன்று பம்பாய் முழுவதும் இதே பேச்சு. கிங்காங் தாராசிங் எதிர்பாராமல் ஒரு கடையில் சந்தித்து விட்டதாகவும் பெரிய ரகளை ஆகிவிட்டதாகவும் ஞாயிறு மல்யுத்தப் போட்டியில் கண்டிப்பாகக் கொலைதான் விழும் என்றும் இன்னும் கற்பனையாகப் பல கதைகளும் பேசப்பட்டன.