பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

சொன்னால் நம்பமாட்டீர்கள்



இந்நிலையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைப்பதானால் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது என்று குமாரசாமி ராஜா கருதினார். மீண்டும் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டு வருவதை காமராஜ் எதிர்த்தார்.

கடைசியில் சர்தார் வல்லபாய்படேலும், நேருஜியும் ராஜாஜிதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் காங்கிரஸ்காரர்கள் கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஆனால் காமராஜ் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து வந்தார். ராஜாஜி மந்திரிசபை அமைத்தார். கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்த்தார்கள். “ராஜாஜி மந்திரிசபை எதிர்ப்புக் கூட்டம்” என்று மூலைக்கு மூலை போட்டார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எதிரிகள் அனைவரும் சேர்ந்து கொண்டார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டிகள் மெளனமாகவே இருந்தன. காமராசரும் நமக்கென்ன என்பது போல வாளாவிருந்தார். இதை என்னால் கொஞ்சங்கூட பொறுக்க முடியவில்லை. நேராக காமராஜரிடம் போனேன். “இப்படி இருந்தால் எப்படி?” என்றேன்.

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றார். “மந்திரிசபை காங்கிரஸ் மந்திரி சபைதானே. அதை ஆதரித்து நாம் கூட்டம் போட்டு எதிர்க்கட்சிகளின் போக்கை அம்பலப்படுத்த வேண்டாமா?” என்றேன்.

“ராஜாஜியை எவன் கொண்டுவந்தானோ அவன் செய்யட்டும். நான் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றார்.

“நீங்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர். நடப்பது காங்கிரஸ் மந்திரிசபை. இதை ஆதரிப்பது ஒரு காங்கிரஸ்காரன் கடமை அல்லவா?” என்றேன்.