சின்ன அண்ணாமலை
181
“ஆமா கடமைதான். நீ வேண்டுமானால் உன் கடமையைச் செய்” என்று கோபமாகப் பேசினார்.
“கடமையைக் கண்டிப்பாகச் செய்வேன்” என்று கூறிவிட்டு, திரு. ம.பொ.சி.யிடம் போனேன். பின்னர் சி. சுப்ரமண்யத்தைச் சந்தித்தேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களையும் சந்தித்துப் பேசினேன்.
அதன் பலன் சென்னை கடற்கரையில் திரு. ம.பொ.சி. தலைமையில் ராஜாஜி மந்திரிசபை ஆதரிப்புக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. ராஜாஜியும் வந்து கலந்து கொண்டார்.
பின்னர் பட்டி தொட்டிகளிலெல்லாம் மந்திரிசபைக்கு ஆதரவுக்கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்டுகள் ஒருவாறு அடங்கினார்கள். இவைகள் எதிலும் காமராஜ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. என்மீது மீண்டும் அவர் கோபங்கொண்டார்.
ராஜாஜிக்கு இக்கட்டான நிலைமை உண்டானது. புதிய கல்வித் திட்டத்தைத் திரித்துக் கூறி ராஜாஜியை திராவிடக் கழகம்-முன்னேற்றக் கழகம் எல்லாம் எதிர்த்தார்கள். அப்போதும் தலைவர் காமராஜ் ராஜாஜிக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதனால் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் காமராஜ் முதன் மந்திரியானார்.
ராஜாஜி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு அண்ணாதுரை அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 1967 தேர்தலில் காமராஜ் அவர்களையும் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்தார்.
ராஜாஜி - காமராஜ் சண்டையினால்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது. தேசிய சக்திகள் குன்ற, தேசவிரோத சக்திகள் பலமடைந்தன.