பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சொன்னால் நம்பமாட்டீர்கள்



இத்தனைக்கும் திரு. காமராஜ் அவர்களின் பெருமையை திரு. ம.பொ.சி. நாடு நகரமெல்லாம் பேசிப் பரப்பினார்.

ஆனால் திரு. அண்ணாதுரை, திரு. மு. கருணாநிதி இவர்களை எவ்வளவோ தாக்கி திரு. ம.பொ.சி. பேசியிருக்கிறார். மா.பொ.சி.யின் உண்மையான நாட்டுப்பற்றையும், தமிழுணர்ச்சியையும் தமிழ் இனப் பற்றையும் மதித்து அண்ணா அவர்களும் கலைஞர் மு. க. அவர்களும், ம.பொ.சிக்கு அவர்களால் முடிந்த பெருமையையும் கெளரவத்தையும் செய்திருக்கிறார்கள். அது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டது. தி.மு.க தோழர்கள் வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பேரில் ஊரெல்லாம் முழக்கினார்கள். இப்போது அவர்களுடன் ம.பொ.சி., ராஜாஜி வேறு இருந்தார்கள். கேட்க வேண்டுமா அமர்க்களத்தை!

இச்சமயம் இளைஞர்கள் யாரும் காங்கிரசைச் சீண்டவில்லை. ஒரு ஆண்டு, இரண்டாண்டு பொறுத்துப் பார்த்தேன், காங்கிரசில் யாரும் புதிய வேகம் கொடுக்கக் கூடியவர்கள் தென்படவில்லை.

கட்சித் தொண்டர்கள் நாளுக்கு நாள் உற்சாகமிழந்து வந்தனர்.

ஒருநாள் நான் மதுரை சென்றிருந்தேன். எனது நண்பர் திரு. ஆனந்தன் அவர்கள் (மதுரைநகர முன்னாள் துணை மேயராக இருந்தவர்) என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் தமிழ்நாட்டில் காங்கிரசின் நிலை பற்றியும், காங்கிரசிற்கு இளைஞர்களைக் கொண்டு வருவது எப்படி என்பதைப்பற்றியும் ஆலோசனை செய்தேன்.