பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

சொன்னால் நம்பமாட்டீர்கள்



திருமதி. சரோஜினி நல்ல துணிச்சல் உள்ளவர். ஆகவே கொஞ்சமும் தயங்காமல் போலீசாரைப் பிளந்து கொண்டு செல்லமுனைந்தார். பெண்மணிகள் இருவர், தங்களை இடிப்பது போல் வருவதைப் பார்த்த போலீசார் கொஞ்சம் கூச்சப்பட்டு இலேசாக ஒதுங்கிக் கொடுத்தார்கள்.

அவ்வளவுதான் சத்தியாகிரகிகள் அத்தனைபேரும் கோஷம் செய்து கொண்டு ஒரே ஓட்டமாக சட்டசபைக்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நுழைந்துவிட்டோம். சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது. திரு. கோபால மேனன் சபாநாயகர். திரு. காமராஜ் முதல் மந்திரி, திரு. சி. சுப்ரமணியம் நிதி மந்திரி மற்றும் மந்திரிகள். சட்டசபை அங்கத்தினர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். நாங்களோ சட்டசபைக்குள்ளே நின்றுகொண்டு “வேங்கடத்தை விட மாட்டோம்” என்றெல்லாம் முழக்கம் செய்தோம்.

சபாநாயகர் உத்தரவு இல்லாமல் சபைக்குள் போலீசார்வர முடியாது. அதனால் போலீசார் வெளியே நின்று கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். சபாநாயகர் கோபாலமேனன் என்னைப் பார்த்து'சபைக்குள் வரக் கூடாது. சட்ட விரோதம், வெளியே போங்கள்” என்றார்.

உடனே திருமதி சரோஜினி, “நீங்கள் ஒரு மலையாளி. இது தமிழர் பிரச்சினை. மந்திரி சபையின் கவனத்தைக் கவரவே நாங்கள் உள்ளே வந்திருக்கிறோம்” என்றார்.

உடனே முதலமைச்சர் காமராசர் எங்களிடம், “சரி, எல்லோரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்” என்றார், வெளியே வந்தோம். எங்களுடைய கோரிக்கையைச் சொன்னோம். “சரி. என்னால் செய்யக் கூடியதைக் கட்டாயம் செய்கிறேன்” என்று சொன்னார்.