பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

சொன்னால் நம்பமாட்டீர்கள்



காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த திரு நீலகண்டன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு, இந்தப் பெண் காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். கொஞ்சமும் யோசியாமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

பின்னர் நடனக் காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தோம்.

எல்லோரும் ‘ஆகா’ என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தாள். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ் நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவிதான்!

சொன்னால் நம்பமாட்டீர்கள், “தங்கமலை ரகசியம்” படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜா தேவிக்கு அப்போது பந்துலு அவர்கள் கொடுத்த பணம் ரூபாய் இருநூற்றி ஐம்பதுதான் பின்னர் அதே பந்துலு அதே சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உண்டு. டைரக்டர் நீலகண்டன் அவர்கள் சொல்லியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தேன்.

ஒவ்வொரு படத்திற்கு பணம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?

முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.

மேற்படி ஒப்பந்தம் முடிந்ததும். எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன். “ஒரு டெஸ்ட் எடுங்கள் பார்க்கலாம்” என்று சொன்னார். சரி என்று சிட்டாடல் ஸ்டுடியோவில் ஒரு ‘டெஸ்ட் எடுத்தோம்’.