சென்னை தியாகராய நகர், பனகல் பார்க் அருகில்தான் தமிழ்ப் பண்ணை, அதன் எதிர் பிளாட்பாரத்தில் சிலர் காய்கறி விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் திடீரென்று ஒருபோலீஸ் லாரி நிறைய போலீசார் வந்து காய்கறி விற்றவர்களை அடித்துக் காய்கறிகளைத் தெருவில் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். நான் ஓடிப் போய் போலீசாரின் செய்கையை எதிர்த்தேன், மக்கள் என் பக்கம் சேர்ந்ததும் சார்ஜண்ட் என்னைக் கைது செய்வதாகச் சொல்லி லாரியில் ஏற்றிக் கொண்டு போனார்.
ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்வதாகச் சொன்னார். “நான் விடுதலையாக முடியாது. வாருங்கள் கமிஷனரிடம் போவோம், இல்லையென்றால் முதலமைச்சர் காமராஜரிடம் போவோம்,” என்று சென்னேன். பின்னர் சார்ஜண்ட் என்னை முதல் அமைச்சர் வீட்டில் கொண்டு வந்துவிட்டார்.
காமராசர் அப்போதுதான் வெளியில் புறப்படும் தறுவாயிலிருந்தார். என்னைக் கண்டதும். “என்ன சங்கதி?” என்றார்.
காய்கறி விற்கும் ஏழைகளுக்கு ஏற்பட்ட கதியைச் சொன்னேன்.