பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

223



“அப்படியா, பின்னே ஏறுங்க காரிலே, அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்,” என்று கூறிப் புறப்பட்டார். குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் விவரம் பூராவும் சொல்லி, இந்த ஏழைகள் மானமாகப் பிழைக்க ஏதாவது வழி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அங்கே நின்ற ஏழை எளியவர்களையும் தெருவில் கிடக்கும் காய்கறிகளையும் பார்த்துவிட்டு “இதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“என்மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டல்லவா?” என்றேன்.

“நிச்சயமாக” என்றார்.

“அப்படியானால் நான் சொல்லும் இடத்தில் மார்க்கெட் வைக்க உத்தரவிடுங்கள், இந்த ஏழைகளை வாழ வைக்கலாம்” என்றேன்.

அப்போது அங்கு வந்தசேர்ந்த போலீஸ் கமிஷனரை காமராஜர் கூப்பிட்டு, “இவருடன் கலந்து மார்க்கெட் வைக்க ஏற்பாடு செய்யுங்கள், ஏழைகள் பிழைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

காமராஜ் அவர்களின் உத்தரவுப்படி போலீஸ் கமிஷனர் அவர்களும் நகரசபை கமிஷனர் அவர்களும் நானும் கலந்து பேசி பனகல் பார்க்கை ஒட்டிய உஸ்மான் ரோடு பிளாட்பாரத்தில் வரிசைக் கிரமமாக எண் கொடுத்து ஒவ்வொரு வியாபாரிக்கும் இடம் ஒதுக்கி மார்க்கெட் நடத்தச் சட்டப்பூர்வமாகச் செய்தோம்.

பின்னர் அதே மார்க்கட் இடத்தை மாநகராட்சி ஏலத்திற்கு விட்டு அதில் நல்ல வருமானமும் தேடிக் கொண்டது.