24
சொன்னால் நம்பமாட்டீர்கள்
அவள் ஏற்கனவே பயந்த கபாவம் உள்ளவள். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாள். ஆனால்-எதிர்பாராதவிதமாக இந்த போலீசார் விரட்டிய சம்பவம் அவளைக் கொஞ்சம் தைரியசாலியாக்கியது. சிறிது அரசியலிலும் சிரத்தை ஏற்பட வைத்தது.
1944 முதல் அவள் என்னுடன் சென்னையில் வசித்தாள். நான் ஒரு அரசியல்வாதியாகையால், வியாபாரத்தை லாபகரமாக நடத்தத் தெரியவில்லை. தமிழ்ப்பண்ணை புத்தகங்களை அழகுறப்போடுவதிலும், புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்துவதிலும், பண்ணையை நாடிவரும் தேச பக்தர்கள், தமிழ் ஆர்வமுள்ளவர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கு உதவி செய்வதிலும் அதிக நாட்டமுடையவனாக இருந்து வந்தேன். அதனால் வியாபாரத்தில் லாப நஷ்டம் பார்த்து நெளிவு சுளிவு பார்த்து நடத்தக்கூடிய வியாபார நுட்பம் தெரியவில்லை. வந்ததெல்லாம் லாபம் என்று நினைத்து செலவு செய்து வந்தேன்.
இப்படியிருந்தால் எனக்குப் பணமுடை வராமல் இருக்குமா? சொன்னால் நம்பமாட்டீர்கள், எனக்குப் பணமுடை வரவில்லை. காரணம் என் மனைவி அப்போதைக்கப்போது தன் நகைகளை விற்றுப் பணமாக்கி எனக்குப் பணமுடை தெரியாமல் செய்து வந்தாள்.
டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் அவர்கள் ராஜாஜி மந்திரி சபையில் இருந்தபோது, திரு.வி.க. மணிவிழாவிற்கு அழைக்கச் சென்றிருந்தேன். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று டாக்டர் ராஜன் கேட்டார்.
“புத்தகம் போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன்.