பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கல்கியைக் கண்டேன்!

தேவகோட்டைக்கு ஒரு சமயம் ராஜாஜி வந்திருந்தார். ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது கூட்டங்களில் பேச வேண்டுமென்ற மோகம் எனக்கு அதிகமாக இருந்த நேரம். ஹரிஜன ரங்கண்ணாவைக் கெஞ்சி ராஜாஜி வரும் கூட்டத்தில் பேச அனுமதி வாங்கிக் கொண்டேன். ஆனால் ராஜாஜி கூட்டத்திற்குவருவதற்கு முன்பே என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.

நான் ராஜாஜியைப் பற்றி ஆனந்தவிகடனில் வந்த கட்டுரையை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். நான் பேச ஆரம்பித்ததும் நல்ல வேளையாக ராஜாஜி வந்துவிட்டார். ஒரே கரகோஷம். எனக்கு உதறல் எடுத்தது. ஆனால் ராஜாஜி அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்து “தைரியமாகப் பேசு” என்றார்.

நான் மளமளவென்று ராஜாஜியைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்ததைப் பேசினேன். சபையோர்கள் ஒவ்வொரு கருத்துக்கும் கரகோஷம் செய்து உற்சாக ஒலி எழுப்பினார்கள். பேசி முடிந்ததும் ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு, வணங்கினேன்.

ராஜாஜி என் தலையைத் தொட்டு “நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்று சொல்லி ஆசி கூறினார். ராஜாஜி மிக புத்தி கூர்மையுள்ளவரல்லவா? அதனால் நான் மனப்பாடம் செய்ததைக் கண்டு பிடித்து விட்டார்.