பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேசபக்தி

நான் தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருக்கும்போது கமலா நேரு அம்மையார் இறந்து போனார்கள். அதற்கு விடுமுறைவிட வேண்டுமென்று தலைமையாசிரியரிடம் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரேயடியாக முடியாது என்று மறுத்து விட்டார். வேறு வழியில்லாமல் ஹர்த்தால் செய்வதென்று முடிவு செய்து மாணவர்களை ஒன்று திரட்டி ஊர்வலமாகக் கூட்டிக் கொண்டுபோய் விட்டேன்.

தலைமையாசிரியர் மிகுந்த கோபம் கொண்டு என்னை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார். நான் அவரிடம் நேரில் சென்று “தேச பக்தியாக இருப்பது குற்றமா” என்றேன். “ஹர்த்தால் செய்வது பெருங்குற்றம். ஆயினும் நீ செகரட்ரிக்கு உறவினனாக இருப்பதால் மன்னிப்பு எழுதிக் கொடு, உன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுகிறேன்” என்றார்.

“நான் செய்தது குற்றமில்லை. நாட்டின் தலைவி இறந்ததற்குக்கூட பள்ளிக்கூடம் விடுமுறை விடாததுதான் குற்றம். ஆகவே நீங்கள்தான் தவறை உணரவேண்டும். நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்றேன்.

“நீ வெளியே போ” என்று கூச்சல் போட்டார். “நான் இப்போது வெளியே போகிறேன். ஆனால் நீங்கள் இந்தப் பள்ளியை விட்டு வெளியே போகும் காலம் விரைவில் வரும்” என்று கூறிவிட்டுச் சென்றேன்.

சொந-3