பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விடுதலை ஆவேசம்

1942 ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்தே பாரத நாட்டு மக்கள் ‘விடுதலைப்புரட்சி’க்குத் தயாரான நிலையில் பரபரப்புடன் இருந்தனர்.

என்னைப் போன்றவர்கள் மக்களிடையே நெருப்புப் பொறி பறக்கப் பேசிய பேச்சுக்கள் புரட்சி எந்த நேரமும் வெடிக்கலாம் என்பதற்கு அறிகுறிகளாய்த் தென்பட்டன.

நான் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைத் தட்டி எழுப்பும் விதத்தில் சுதந்திர வேட்கையை உண்டாக்கினேன் ஆங்கில ஆட்சியை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டுமென்றும் அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் என்றும் மக்களை பக்குவப்படுத்தினேன். எங்கள் ஊரில் நான் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் ஆயிரக் கணக்கில் வருவதும், இளைஞர்கள் அங்கும் இங்கும் பரபரப்புடன் திரிவதும், அரசாங்கத்தை எதிர்த்துப் பல துண்டுப் பிரசுரங்களை ரகசியமாக மக்களிடம் விநியோகிக்கப்படுவதும் போலீசாருக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது.

போலீசார் எந்த இடத்திலும் தனியாக வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு எந்தப் போலீஸ்காரரும் போக முடியவில்லை. போலீசார் அனைவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்க, தூங்க, சாப்பிட வேண்டிய நிலையை ஊரில் உண்டாக்கிவிட்டோம். தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டுவிட்டன. டெலிபோன்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன