பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

59



கொடி சொருகி இருக்கும் இடம் “ஈட்டி முனை” என்றும் ரகசியமாகச் சொல்லிக் கொண்டார்கள். இப்படி மக்கள் போலீசைத் தாக்க தயாராக இருப்பதை அறிந்து நான் வேதனை அடைந்தேன். காந்தீயம் அதுவல்ல. எனக்குத் தெரியும். எனினும் அந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். எனக்கு இள வயது.

ஆகவே 144 உத்தரவை மீறாமல் கூட்டத்தைக் கலைத்தால் மக்கள் என்னைக் கோழை என்றும் துரோகி என்றும் காரி உமிழ்வார்கள். இப்படி நான் நிலை தடுமாறிக் கொண்டு மேடையில் நிற்கையில் ஜே ஜே என்ற மக்கள் ஆரவாரத்தின் மத்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு வீராசாமி ஒரு போலீஸ் படையுடன் வந்து மேடைக்கு முன் அணிவகுத்து நின்றார்.

மக்கள் அவரைச் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தார்கள். சிலர் ‘போலீஸ் ஒழிக’ என்றும் ‘காட்டிக் கொடுக்கும் கங்காணிகள் ஒழிக’ என்றும் ‘துரோகிகள் ஒழிக’ என்றும் முழக்கம் செய்தார்கள்.

நான் மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். மக்களோ ஒரே குரலாக, “தலைவர்களை விடுதலை செய்”, “போலீசே திரும்பிப் போ” என்று கர்ஜனை செய்தார்கள். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் திரு. வீராசாமி அவர்கள் மேடைமீது வந்து என்னிடம் 144 தடை உத்தரவை நீட்டினார்.

மக்கள் முழக்கத்தில் நான் ஆவேசத்துடனிருந்தேன். நீட்டிய 144 தடை உத்தரவை இன்ஸ்பெக்டர் கையிலிருந்து பிடுங்கி, “ஆங்கில அரசாங்கத்தின் 144 தடை உத்தரவுக்கு இந்திய மக்களாகிய நாங்கள் கொடுக்கும் மரியாதை இதுதான்” என்று கூறி சுக்கு நூறாகக் கிழித்து என் காலில் போட்டு மிதித்தேன்.