பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க, என் பெயர் வீரபத்ரன் என் உடம்பிலும் மறவன் ரத்தம் ஓடுது. உண்மையான மறவன் ஒவ்வொருவனும் தேச பக்தி உள்ளவன்தான் சார், தேசத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்.

இந்த ஓட்டலுக்கு வெள்ளைக்காரங்க, அதிலும் போலீஸ், ராணுவ அதிகாரிகள் வந்தாங்கன்னா, அவர்களுக்கு நான் சாப்பாடு பரிமாற வேண்டி வந்தால் கட்டாயம் விஷத்தைப் போட்டுக் கொடுத்திடுவேன் சார்”என்றான் ஆவேசமாக

அவனுடைய தேசபக்தியைப் பார்த்து நாங்கள் பிரமித்து விட்டோம். நாங்கள் யார் என்பதையும் இப்போது எந்தநிலையில் அங்கு வந்திருக்கிறோம் என்பதையும் சொன்னவுடன் அவன் எங்களை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு தாரை தாரையாகக் கண்ணிர் விட்டான். அவனால் பேசமுடியவில்லை.

திருவாடானை ஜெயிலை உடைத்து மக்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள் நீங்கள்தானா, நீங்கள்தானா, நீங்கள்தானா என்று எங்களைத் தொட்டுப் பார்த்தான்.

பின்னர் ஓட்டல் முதலாளியிடம் எங்களைக் கூட்டிச் சென்று. எங்களைப் பற்றிய முழு விபரத்தையும் அவரிடம் சொல்லி விட்டான். “பில்லுக்கு பணம் கொடுக்க வேண்டாம். நானும் ஒரு காங்கிரஸ்காரன் தான். பிழைப்பிற்காக வேறு துணி கட்டியிருக்கிறேன். நீங்கள் பக்கத்திலிருக்கும் அறையில் தங்கிக் கொள்ளுங்கள்” என்று ஒட்டல் முதலாளி இந்தியில் சொன்னார்.

எல்லாம் வீரபத்ரன் ஏற்பாடுதான். அறையில் தங்கி யிருந்தோம். சுமார் அரைமணி கழித்ததும், அறையைத் திறந்து கொண்டு வீரபத்ரன், ஓட்டல் முதலாளி, முதலியவர்களுடன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.