சிறு வயதிலிருந்தே கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தைப் படித்தே வளர்ந்தவன் நான் கல்கி அவர்கள் ராஜாஜி அவர்களைப் பற்றி எழுதியவை அனைத்தும் என் மனதில் பதிந்துவிட்டது. ராஜாஜி அவர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு விதமான தெய்வீக உணர்ச்சி உண்டாகும்.
அவருடைய தூய்மையும் நேர்மையும் அவர் பாதத்தைத் தொட்டு, பலமுறை என்னை வணங்கும்படி செய்திருக்கிறது. அவரை ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வதைவிட அரசியலில் ஒரு ‘ரிஷி’ என்று கூறலாம். புராணங்களில் வரும் வசிஷ்டர் போன்ற மகாஞானி அவர்.
1942 ஆகஸ்ட் புரட்சியை ராஜாஜி ஆதரிக்கவில்லை. ‘வன்முறை, காந்தீயம் அல்ல’ என்று அந்தப் புரட்சியைப் எதிர்த்தார். ஆயினும் மேற்படி புரட்சி தானாக உருவானது. மக்கள் மனதில் ஆங்கிலேய ஆட்சிமீது இருந்த வெறுப்பால் அந்தப் புரட்சி வெடித்தது. ராஜாஜி மீது பற்றும் பாசமும் கொண்டி ருந்தாலும் என் போன்ற இளைஞர்கள் அந்த நேரத்தில் வாளாயிருக்க இயலவில்லை.
செய் அல்லது செத்து மடி என்ற காந்தியடிகளின் வாக்கே வேதவாக்காக இருந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ என்பதே தாரக மந்திரமாக இருந்தது. ஆகவே ராஜாஜியையும் மீறி நான் ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டேன். அரசாங்கம் என்னைக் கைது செய்தது.