பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேராசிரியர் கல்கி அவர்களின்
வாழ்த்து

நண்பர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை பெரும்பாக்யசாலி. ராஜாஜி அவர்களின் திருவாக்கினால் சின்ன அண்ணாமலை என்ற சிறப்புப் பெயரை அடைந்தவர். அவரை என் சிறந்த நண்பராகக் கருதி வருகிறேன்.

பல இடங்களுக்கு அவருடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அவரது தேச சேவை மகத்தானது. அதை எழுதினால் ஒரு வீரசரித்திரமாக இருக்கும்.

ஸ்ரீ சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர். பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய சபையில் மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக் கூடியவர். ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்படி பேசுவார்; சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார்.

இவருடைய பேச்சாற்றலைப் பார்க்கும் போது இவரைப் போன்றவர்கள் நமது சட்டசபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்று நான் எண்ணுவது உண்டு.

பேசும் ஆற்றலைப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை, அழகிய சிறு கதைகள் எழுதியிருக்கிறார். சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். ரஸமான பிரயாணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இவருடைய செயல்திறன் வியக்கத்தக்கது. எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் செயல் வீரர் இவர். ராஜாஜி அவர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும்.