பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

91



நான் சென்னை வந்ததும் அந்த வாரக் ‘கல்கி’ பத்திரிக்கையை என்னிடம் சிலர் கொடுத்து என்னைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். ஆவலுடன் பத்திரிகையைப் பிரித்துப்பார்த்தேன்.

கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டைப் பற்றி பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ‘நாடோடி’ அவர்கள் எழுதியதில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி என்னைக் ‘குஷி பேர்வழி’ என்று அடைமொழியும் கொடுத்து பிரபல கார்ட்டூனிஸ்ட் சாமா அவர்கள் எழுதிய என் போன்ற கேலிச்சித்திரம் ஒன்றையும் பிரசுரித்திருந்தார்.

அதுதான் முதன் முதலில் என்னைப்பற்றி அம்மாதிரி பத்திரிகையில் வந்தது.

சென்னை ‘நாலு பேருக்கு’ என்னைத் தெரியும்படி முதலில் செய்தவர் நாடோடிதான். சொன்னால் நம்பமாட்டிர்கள். அதே நாடோடி அவர்கள் நான் தமிழ்ப் பண்ணைப் புத்தகப் பதிப்பகம் வைத்து நடத்துவதைப் பார்த்துவிட்டு, “எனக்கு ஏதாவது பிழைக்கும் வழி சொல்லித்தரக் கூடாதா?” என்று கேட்டார்.

“பிழைக்கும் வழி” என்று ஒரு நகைச்சுவைப் புத்தகம் எழுதுங்கள், அதுதான் நீங்கள் பிழைக்கும் வழி என்றேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் நாடோடி முதலில் எழுதி வெளிவந்த புத்தகத்தின் பெயர் “பிழைக்கும் வழி” என்பதாகும். அதை ‘நாலுபேர்’ புத்தகமாகப் படிக்கும்படி வெளியிட்டவனும் அடியேன்தான்!