பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அம்பலவன் பழுவூர் நக்கன்[1]

கோவந்தபுத்தூர், விசயமங்கை

கோவந்தபுத்தூர், கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவதலம். இதனை அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். கோவந்தபுத்தூர் என்பது ஊரின் பெயர்; செயமங்கை என்பது திருக்கோயிலின் பெயராகும். இதனை,

‘கொள்ளி டக்கரை கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை‘

என்ற அப்பர் தேவாரத்தான் அறியலாம்.

ஒரு பசு சிவலிங்கத் திருமேனியின்மீது பால் சொரிந்(து அபிஷேகம் செய்)தமையால் இதற்குக் கோவந்தபுத்தூர் என்ற பெயர் எய்தியது என்பர். இது,

‘கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே‘

என்று ஞானசம்பந்தர் கூறியமையால் அறியப்பெறும். ‘வெள் விடைக் கருள்செய் விசயமங்கை‘ என்று அப்பர் கூறியபடியால் இடபதேவருக்கு அருள் செய்த வரலாறும் இங்கு அறியப்படுவ தொன்றாகும்.

இனி, விசயன் (அருச்சுனன்) வழிபட்டமையால் இத் திருக்கோயில் விசயமங்கை என்ற பெயர் எய்தியதென்பர்.

‘பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து

வேண்டும் நல்வரங் கொள் விச யமங்கை‘

என்ற திருநாவுக்கரசர் தேவாரம் இதனை வலியுறுத்தும்.


  1. இது ‘குமரகுருபரன்‘ ‘ஞானசம்பந்தம்‘ ஆகியவற்றுள் வெளிவந்துள்ளது.