பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

குலோத்துங்க சோழன் மீது பாடிய ’கலிங்கத்துப் பரணி’ என்னும் நூல் இப்போரை விரித்துக் கூறுகின்றது. இப்போரை நடத்தி வாகை சூடிக் குலோத்துங்க சோழனுக்குப் புகழெய்துவித்தவன் ’கருணாகரத் தொண்டைமான்’ என்னும் படைத் தலைவனேயாவான்.

வட கலிங்கப் போர்

ஒரு நாள் குலோத்துங்க சோழன் காஞ்சிமாநகரில், தன் அரண்மனையில், சித்திர மண்டபத்து இருந்தான். அப்பொழுது தென்னவர், வில்லவர், கூவகர், சாவகர், சேதிபர், யாதவர், கன்னடர், பல்லவர், கங்கர், கடாரர், சிங்களர், வங்களர் முதலிய பல மன்னர்கள் திறைப் பொருள் கொணர்ந்து, அளித்து நின்றனர். அரசன், ”திறை கொடாது ஒழிந்தோர் யாரேனும் உளரோ ?” என்று கேட்க, ”வடகலிங்க அரசன் இரண்டுவிசை திறை கொடு வருகிலன்” என மந்திரக் கணக்கர் பணிந்து புகன்றனர். மன்னன் முறுவல் கொண்டு ”வடகலிங்க வேந்தனைக் கொணர்மின்” என்று கூறினன். உடனே கருணாகரத் தொண்டைமான், ”எழு கலிங்கமவை எறிவன் ; எனக்கு விடையளிக்க” என்று வேண்டப், புலியுயர்த்தவன் விடைகொடுத்தனன். கருணாகரன் யானைமேல் ஏறிக் கொண்டான். கருணாகரனுடைய அண்ணனாகிய பல்லவர்க் கரசு என்பானும் யானை மேல் புறப்பட்டான். இவர்களுடன், வாணகோவரையனும், முடிகொண்ட சோழனும் குதிரை மேலும் யானை மேலும் முறையே ஏறிப் போர்க்குப் புறப்பட்டனர். பாலாறு, குசைத்தலை, பொன் முகரி, பழவாறு, கொல்லி, வடபெண்ணை, மண்ணாறு, குன்றி, பேராறு (கிருஷ்ணை), கோதாவரி, பம்பை, காயத்திரி, கோதமை என்னும் ஆறு-