240
சோழர் வரலாறு
துறையிற்சிறந்தார்க்கு ‘மாராயன், பேரரையன்’ என்பனவற்றை அளித்தான். ‘வாச்சிய மாராயன்’, ‘திருத்தப் பேரரையன்’ போன்றன கல்வெட்டுகளிற் பயில்வனவாகும்.
இராசராசன் தமக்கையான குந்தவ்வையார் கணவனான வல்லவரையர் வாண்டிய தேவர் என்பவன் வடஆர்க்காடு கோட்டத்தில் பிரம்ம தேசத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவனுடைய வேறொரு மனைவி குந்தள தேவி என்பவள்; மற்றொருத்தி குந்தா தேவியார் என்பவள். குந்தவ்வைப் பிராட்டியார் பழையாறையில் இருந்த அரண்மனையிலேயே இருந்தவர்[1]. இவ்வல்லவரையன் சாமந்தர் தலைவன் (பெரிய சேனாதிபதி) போலும்! இவன் பெயர்கொண்ட நாடு சேலம்வரை பரவி இருந்தது[2].
தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருக்கோவிலுரைச் சார்ந்த மலைநாட்டுப் பகுதிக்கு யாதவ பீமன் என்ற உத்தம சோழ மிலாடுடையார் கி.பி. 1016-இல் சிற்றரசனாக இருந்தான்[3]. கி.பி. 1023-24-இல் கங்கை கொண்ட சோழ மிலாடுடையார் என்பவன் காளத்தியில் உள்ள கோவிலுக்கு விளக்கிட்டதைக் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது[4], சங்காள்வார் என்பவர் மைசூரை ஆண்ட சிற்றரசர். கொங்காள்வார் என்பவர் சிற்றரசர் ஆவர். ஆண்டுகள் செல்லச் செல்லக் கொங்காள்வார் தம்மைச் சோழர் மரபினர் என்றே கூறலாயினர்; அங்ஙனமே சில தெலுங்கு-கன்னட மரபினரும் கூறிக்கொண்டனர்.
படைகள் : அரசனிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன; தேர்ப்படை இல்லை. தேர் இருந்ததாக ஒரு கல்வெட்டிலும் குறிப்பில்லை. எந்த வீரனும் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி வந்தான்