டாக்டர். மா. இராசமாணிக்கனார்
27
27) ஒத்திருத்தல் காணத்தக்கது. எனவே, ஏறத்தாழ, கி.மு. 60 - கி.மு. 10 என்பது கரிகாற் சோழன் காலம் எனக் கோடல் தவறாகாதன்றோ?
இம்முடிபிற்குக் கடல்வாணிகச் செய்தியும் துணை செய்தல் காண்க. கரிகாலன் பாடப்பெற்ற பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப் பாலையிலும் புகார்ச் சிறப்பும் கடல் வாணிகச் சிறப்பும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழர் ரோமப் பெருநாட்டுடன் வாணிகம் செய்யத் தொடங்கியது கரிகாலனுக்கு முன்னரே ஆயினும், அது வளர்ச்சியுறத் தொடங்கியது, கி.மு. முதல்[1] நூற்றாண்டிற்றான் என்பது உரோமரே எழுதி வைத்துள்ள குறிப்புகளால் நன்குணரலாம். கி.மு.39 முதல் கி.மு.14 வரை உரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானுக்குப் பாண்டிய மன்னன் கி.மு. 20-இல் ‘துதுக்குழு’ ஒன்றை அனுப்பினான் என்பது நோக்கத்தக்கது. இஃதொன்றே தமிழர் உரோமரோடு கடல் வாணிகம் சிறப்புற நடத்தினர் என்பதற்குப் போதிய சான்றாகும்.
இமயப் படையெடுப்பு
கரிகாலன் ஆட்சிக்காலம் என நாம் கொண்ட கி.மு. 60-கி.மு.10 ஆகிய காலத்தில் வடநாடு இருந்த நிலையைக் காணல் வேண்டும். மகதப்பெருநாடு சுங்கர் வசத்தினின்று ‘கண்வ’ மரபினர் கைக்கு மாறிவிட்டது. கி.மு.73-இல் ‘வாசுதேவ கண்வன்’ மகதநாட்டுக்கு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.பி. 28 வரை ஆண்டனர். அவர் அனைவரும் வலியற்ற அரசரே ஆவர்.[2] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைத் தலைநகராகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைக் கோ நகராகக் கொண்ட