பக்கம்:சோழர் வரலாறு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

331




நல்லியல்புகள் : பரகேசரி மூன்றாம் குலோத்துங்கன் செய்த போர்களிலிருந்தும் பெற்ற வெற்றிகளிலிருந்தும் “இவன் சிறந்த மானவீரன்” என்பது தெரிகிறது. தன்னை அடைக்கலம் புகுந்த பாண்டியன், சேரன், வேணாட்ட ரசன், கரூர் அரசன் இவர்களைத் தக்க சிறப்புடன் நடத்தி அவர்கட்கு அவர்தம் நாடுகளை ஆளக்கொடுத்த இவன், ‘அடைந்தார்க்கு எளியன்’ என்பதை உணர்த்துகிறது. தன்னிடம் பகைத்த அரசரை வென்று அவர் நகரங்களை அழித்தனன் என்பதிலிருந்து இவன், ‘பகைவர்க்குக் காலன்’ என்பது விளங்குகிறது. கம்பர்போன்ற பெரும் புலவர் நட்பைப்பெற்ற இவன் சிறந்த தமிழ்ப் புலவனாகவும் புலவரைப் போற்றும் புரவலனாகவும் இருந்தான் என்பதுதெரிகிறது. இவனுடைய சைவ சமயத் திருப்பணிகளை நோக்க, இவ்வள்ளல் ‘சிறந்த சிவ பக்தன்’ என்பதை அறியலாம். ஆனால் அதே சமயம் இவன் செய்துள்ள பிற சமயத் திருப்பணிகளைக்கான, இவனது பரந்த சமய நோக்கம் நன்கு விளங்குகிறது. இவன் மதுரை சென்று வெற்றி கொண்டபோது “அருமறை முழுதுணர்ந்த அந்தணரை அகரம் ஏற்றி ஆதரித்தான்” என வருதலையும், திருவொற்றியூர் வியாகரனசாலைக்கு இறையிலி அளித்தனன் என வருவதனையும் நோக்க, இவன் வடமொழிமீதும் வடமொழியாளர்மீதும் கொண்டிருந்த பற்றும் மதிப்பும் நன்கு விளங்குகின்றன. இவன் கொடைத்திறத்தில் எப்படிப்பட்டவன்?

“தண்டமிழ்க்குப் பொன்னே பொழியும் குலோத்துங்கன்”
“முகில் ஏழுமென்னப் பொன்போத நல்கும் குலோத்துங்க சோழன்”

என்று பலபடியாக இவனைக் கோவை ஆசிரியர் புகழ்தலால், இவனது வள்ளற்றன்மை தெற்றெனத் தெரிகிறதன்றோ? கம்பரும் இவனது ஈகைத் தன்மையை உவமை முகத்தால் பாராட்டி இருத்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/333&oldid=1234303" இலிருந்து மீள்விக்கப்பட்டது