பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O3 செளந்தர கோகிலம்

முதலியார் உங்கள் ஊரில் இருக்க நேரிட்டால், நீங்கள் எல்லோரும் இவருக்கு யாரும் எவ்வித இடைஞ்சலும் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். அது விஷயமாக இவருக்குப் போலீஸ் பந்தோபஸ்தும் கிடைக்கும்படி நான் எழுதுகிறேன். நீங்கள் இனி போகலாம். அடே காத்தான்! ஐயா சிக்கிரம் ஊருக்கு வந்து விடுவார் என்றும், இவருக்கு யாராவது கெடுதல் செய்ய எத்தனித்தால் அவர்கள் கடுமையான சர்க்கார் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஊர் முழுதும் தண்டோரா போட்டுத் தெரிவி” என்றார்.

அதைக்கேட்ட காத்தான் தாங்க வொண்ணாத பெரு மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கூத்தாடி, “புத்தி புத்தி சந்தோசம் சந்தோசம், இப்பவே ஒடி ஒடனே தமுக்குப் போட்டுட்டு மறு சோலி பாக்கறேனுங்க. எசமானே மாத்திரம் சுருக்குனு ஊருக்கு அனுப்பி வையுங்கோ, தொரையே! ஓங்கிளிக்கு ஆயிரங்கோடி புண்ணியமுண்டுங்க. ஒங்க புள்ளெ குட்டிங்க நல்லா சந்தோசமா ஆயிரங்காலம் வாளுவாங்க,’ என்று கூறி சாஷ்டாங்கமாகக் கலெக்டருக்கெதிரில் விழுந்து கும்பிட்டு விட்டுக் குஞ்சிதபாத முதலியாரிடத்திலும் உருக்கமாகவும் பணிவாகவும் செலவு பெற்றுக் கொண்டு வெளியில் சென்றான். மற்ற சாகவிகளும் உடனே வெளியேறினர். பிறகு கலெக்டர் குஞ்சிதபாத முதலியாரது கைரேகை அடையாளத்தை இரண்டு மூன்று காகிதங்களில் பதிய வைக்கச் செய்தபின், தமது சிரஸ்ததாரை அழைத்து, ‘ஐயா என்னுடைய மோட்டார் வண்டியில் இவரை உட்கார வைத்துக்கொண்டு நீர் உடனே திருவையாற்றுக்குப் போய் இவருடைய ஜாகையில் இவரை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வந்து சேரும்’ என்று கட்டளையிட்டார்.

உடனே குஞ்சிதபாத முதலியார் கலெக்டர் தம்மிடம் காட்டிய அளவுகடந்த அன்பையும் மரியாதையையும் உணர்ந்து தமது மனத்தில் பொங்கியெழுந்த நன்றியறிதலின் பெருக்கை வெளியிட்டு அவரைப் பலவாறு மெச்சிப் புகழ்ந்து விடைபெற்றுக் கொண்டு சிரஸ்ததாருடன் அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்றார். -