பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 * லா. ச. ராமாமிருதம் ஜன்மம் எடுக்க வேண்டுமெனவே பரமாணுவாய் வந்திருக்கும் தேவியானவள், உடனே அவ்விளந்தாயின் உள்மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில் பிரவேசித்தாள். ஆனால், ஏற்கெனவே அவள் வகுத்திருந்த விதிப்படி அவ்விடத்தில் ஒரு பிண்டம், வெளிப்படும் முயற்சியில் புரண்டு கொண்டிருந்தது. அதனுடன் தேவி பேசலுற்றாள்: "ஏ ஜீவனே, நீ இவ்விடத்தை விட்டுவிடு. நான் இந்தக் காயத்தில் உதிக்கப் போகிறேன்.” “தேவி, சத்திய ஸ்வரூபியாகிய உனக்குக் கேவலம் இந்த ஜன்மத்தில் இப்பொழுது ஆசை பிறப்பானேன்? இதன் உபாதைகளைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படித் தவிக்கிறோம்? "குழந்தாய், நான் குழந்தையாயிருக்க விரும்புகிறேன். அன்னையாய் இருந்து, என் குடும்பமாகிற இவ்வுலகங்களைப் பராமரித்துப் பராமரித்து நான் கிழவியாகிவிட்டேன். எனக்கு வயதில்லையாயினும், குழந்தையாக வேண்டும் என்னும் இச்சை ஏற்பட்டுவிட்டது-” “தேவி, இப்பொழுது நீ நினைத்திருப்பது அவதாரமா?” “இல்லை; பிறப்பு. நான் முன்னெடுத்த ஜன்மங்கள், பிறர் தவத்தைத் திருப்திப்படுத்துவதற்கும், துஷ்டர்களைச் சம்ஹரிப்பதற்கும் ஆகும். ஆனால் இப்போதோ, இது என் சுய இச்சை. அப்பொழுதெல்லாம், நான் குழந்தையுருவாக நெருப்பிலோ, பூவிலோ, சங்கிலோ உலகத்தில் இறங்கினேன். இப்போதோ, பாங்காக ஒர் உடலிலிருந்தே புறப்பட விரும்பினேன்.” “தேவி, உன் விளையாட்டை நாங்கள் அறியோம். ஆனால், ஜன்மமெடுக்கும் இந்த விளையாட்டில் நீ ஏமாந்து போவாய்.