பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32 * லா. ச. ராமாமிருதம் யார் என்று கண்டுபிடிக்கவில்லையே? சே, என்ன இவ்வளவு அசடாக இருக்கிறாய்? தொட்ட பிசுக்கு, விட்ட பிசுக்கு, எட்டப் பிசுக்கு, கிட்டப் பிசுக்கு, ஜன்மப் பிசுக்கு இதெல்லாம் நீ கேள்விப்பட்டதில்லையா? எங்களுக்குத் தலை கிடையாது. உயிருண்டு; நாங்கள் கபந்தங்கள். ஆடுவோம், பாடுவோம், சிரிப்போம், அழுவோம், அழிவோம், அழிய மாட்டோம்-” ஜனனிக்கு நெற்றிப் பொட்டில் வியர்வை அரும்பியது. “பயமாயிருக்கிறதா? பயப்படாதேம்மா! பயப்படாதே கண்ணு! நாங்கள் இத்தனை பேர்கள் இருக்கிறோமே. எதுக்கு பயம்?” "ஜனனீ!” தோளில் கைபட்டு, ஜனனி திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் கணவன் புன்னகை புரிந்தவண்ணம் நின்றுகொண்டு “என்ன பயந்துவிட்டாய்? என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா?” ஜனனிக்கு மண்டை எரிந்தது. அவனை அவள் மெளனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஜன்னலின் வெளியில் அவள் கண்ட பேயுருவங்கள், உள்ளே பறந்து வந்து சிரித்துக்கொண்டே அவள் உள்ளே புகுவதை உணர்ந்தாள். ஜலத்தைக் குடித்து உப்பும் நெட்டிபோல், தனக்குத்தான் பெரிதாகிக்கொண்டு வருவது போன்ற ஒரு பயங்கர உணர்ச்சி. அவள் உருவம் பெரிதாக ஆக, அவன் உருவம் அவளுக்குச் சுருங்கிக்கொண்டே வந்தது. போகப் போக அவன் புழுப் போலாகி, அவன் சிரிப்பும், அங்க அசைவுகளும் புழுவின் நெளிவைப்போல், அவளுள் பெரும் சீற்றத்தையும் அருவருப்பையும் எழுப்பின. அவளுள் அடைந்த பல்லாயிரம் பேய்களும் ஒரே பேயாய்த் திரள ஆரம்பித்தன.