பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஞாயிறும் திங்களும்



வீசி எறிந்தபொருள் வீசைப் பொருளாகிக்
காசு பணமாகக் காண்கின்றேன் இந்நாளில்
பேராசைக் காரர் பெரியார் எனச்சொல்ல
ஓராசை என்மனத்தே ஓடிச் சுழல்கிறது
தம்வயது தொண்ணூற்றைத் தாண்டிவிட்ட பின்புமவர்
தம்வயது நீண்டுவரத் தாம்ஆசை கொள்கின்றார்
ஏனிந்த ஆசைஎனில் ‘இன்னும்பல் முன்னேற்றம்
நானிங்குச் செய்வதற்கு நாடுகின்றேன்’ என்கின்றார்
நம்மினத்தை ஈடேற்ற நாடுகின்ற ஆசை எனில்
எம்முயிர்க்கு வைத்தநாள் எல்லாம் அவர்க்கீவோம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு
நல்லாண்டு பெற்றிலங்க நாமெல்லாம் வாழ்த்திடுவோம்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயலென்ற முன்மொழியால்
தாம்பெற்ற தி.மு.க. தாயகத்துப் பேரவையில்
ஓங்குற்று மேன்மைபெற உண்டாக்கி விட்டமையால்
தந்தை செயும்பணியைத் தாழ்வின்றிச் செய்துவிட்டார்
அந்தப் பெருமகனை அய்யாவை வாழ்த்திடுவோம்
தேயத்தில் கட்சிபல சேர்ந்து வளர்வதுண்டு
நேயம் வளர்க்கின்ற நேர்த்தியைநாம் பார்த்ததுண்டா?
அய்யா எனஉறவு சொல்லி அழைப்பதற்கு
மெய்யாக ஓர்தலைவர் மேதினியிற் கண்டதுண்டா?
அண்ணா அண்ணாவென் றழைக்கின்ற அன்புமொழி
எந்நாளில் எக்கட்சி எங்கே உரைத்ததுண்டு?
வீட்டுக் குடும்பம்போல் வேண்டிப் பழகுகின்ற
நாட்டுக் குடும்பமென நம்கழகம் வாழ்வதற்குக்
கற்பித்த நம்ஆசான் காட்டும் நெறிநடக்க
முற்பட்டு நின்றால்நாம் முன்னேற்றம் பெற்றிடுவோம்
முன்னேற்றம் நாம்பெற்றால் மூத்திருக்கும் இக்கிழவர்
இந்நூற்றைத் தாண்டி இனிதிருந்து வாழ்ந்திடுவார்
தொண்ணூறு தாண்டி விடின் தொண்டுகிழம் என்றுரைப்பார்
தொண்ணூறு தாண்டிடினும் தொண்டுக் கிழவரிவர்
இவ்வுலகை மாயமென ஏய்க்கும் மதச்சழக்கை
வெவ்வுரையால் சுட்டெரிக்கும் வெந்தழல்தான் நம்பெரியார்
எம்மதமும் அண்டா நெருப்பிவர்தாம் என்றாலும்
அம்மா மதத்தலைவர் அண்டும் மதித்தலைவர்
திட்டப்படும் புலவர் சிந்தையது நோவாமல்
ஒட்டிப் பழகும் உரிமைத் தலைவரிவர்
வாளெடுப்போம் நம்பகையை வாட்டிடுவோம் என்றுபல