பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஞாயிறும் திங்களும்



தன்னாட்சி நாடுந் தலைமகனை, இந்தியத்தின்
முன்னாட்சி செய்கின்ற மு.க.வைத் தந்தவரார்?
மூன்று தலைமுறையை முற்போக்குத் தலைவர்தமை
ஈன்று கொடுத்தவரார்? இன்னும் படைப்பவரார்?
பிற்போக்குக் கொள்கைகளைப் பேரிடிபோல் தாக்கிநின்ற
முற்போக்குக் கொள்கையினான், மொய்ம்புடைய ஏறனையான்,
பாட்டுக் குரியவனைப் பாரதியை விஞ்சிவிட்ட
பாட்டுக்கு வேந்தனவன், பாரதியின் தாசன்றன்
பாட்டுக்குள் வீரத்தைப் பாய்ச்சியவர் ஈரோட்டுப்
பாட்டனன்றோ? ஆற்றலெலாம் பாடி முடிவதுவோ?
ஒப்பரிய நற்றலைவர் ஆனாலும் ஓர்பொழுதும்
தற்செருக்குக் காட்டாத் தலைவர் அப் பண்பால்
எளிமைத் தலைவர்; எவரிடத்தும் இன்சொல்
மொழியுந் தலைவர்; முழுமைபெறும் நம்தலைவர்
தள்ளாட்டம் உற்றும் தடுமாற்றம் இல்லாமல்
சொல்லாட வல்லஒரு சோர்வில்லாப் பேச்சாளர்
பல்லெல்லாம் வீழ்ந்தும் பகுத்தறிவைப் பாய்ச்சுகின்ற
சொல்லெல்லாந் தித்திக்கும் சூடுங் குறையாது
கிண்டல் நிறைந்திருக்கும் கேலி மிகுந்திருக்கும்
கிண்டி அறிவைக் கிளர்ச்சி கொளச்செய்யும்
சிந்தித்துக் கண்ட சிறப்புமிகும் தங்கருத்தை
எந்தச் சமயத்தும் எங்குந் துணிந்துரைக்கும்
அஞ்சாத நெஞ்சத்தை ஆரிடத்துங் கண்டதில்லை
துஞ்சாத சிங்கத் துணிவுமிகப் பெற்றார்.
நமது தலைமுறையில் நாம்பெற்ற பேற்றால்
இமயப் புகழ்கொண்ட ஈடில் தலைவர்
நமக்குக் கிடைத்துள்ளார். நாளும் உழைத்தே
நமக்குற்ற தாழ்வை நசுக்கித் தொலைத்துவிட்டார்
நாமும் தமிழரென நாடாளும் மாந்தரென
ஏமம்[1] மிகக்கொண் டினிதிங்கு வாழ்கின்றோம்
பெற்றதொரு நல்வாழ்வைப் பேணி மிகக்காத்து
நற்றமிழர் என்றுரைக்க நாம்வாழ்வோம் என்றுசொலித்
தந்தை பெரியாரின் தாள்வணங்கி வாழ்த்துரைத்துச்
சிந்தை மகிழ்ந்திருப்போம் சிந்தனையைப் பேணிடுவோம்
என்றுநான் சொல்லி இருகை குவிக்கின்றேன்
மன்றிலுளார் வாழ்க மகிழ்ந்து !

பெரியார் சிலை திறப்பு விழா


திண்டுக்கல்

17-9-1970

  1. ஏமம் - இன்பம்