பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

25



புத்துலகச் சிற்பி


மூவேந்தர் ஆட்சிசெயச், சங்கத் தோட்டம்
       முத்தமிழாம் கனிவளர்க்கப், பெருமி தத்துப்
பாவேந்தர் அறமுரைக்க, உலக மெல்லாம்
       பணிந்தேத்தும் வள்ளுவனார் முப்பால் ஓத,
மாவேந்துங் காட்டகத்து மற்றை நாட்டார்
       மாக்களென மதியின்றி வாழ்ந்த நாளில்
நாவேந்தும் புகழ்மிகுத்த தமிழர் நாடு
       நாகரிகத் தொட்டி லென விளங்கக் கண்டோம்.

வயல்கண்டார், தொழில்கண்டார், வளமை சேர்க்கும்
       வழிகண்டார், பகுத்துண்ணும் வகையுங் கண்டார்,
இயல்கண்டார், இசைகண்டார், எழிலார் கூத்தின்
       இனங்கண்டார், ஈடில்லாக் கலைகள் கண்டார்,
கயல்கண்டார் அதுபோலக் கடலிற் செல்லக்
       கலங்கண்டார் போராட்டக் களமுங் கண்டார்,
செயல்கண்டோர் வியந்தேத்தும் அரசு கண்டார்,
       சீர்கண்டார், பேர்கண்டார் தமிழ மாந்தர்.

தப்பொன்றும் அறியாத வெள்ளை யுள்ளத்
       தமிழ்மாந்தர் விருந்தோம்பும் பண்பால் இங்கு
முப்புரியர் வரும்போது வருக என்று
       முகமலர்ந்து வரவேற்றார் வந்த வஞ்சர்
எப்படியோ வலைவிரித்தார் வீழ்ந்து விட்ட
       எம்மினத்தார் தமைமறந்தார் மயங்கி நின்றார்
ஒப்பில்லை எனவுரைக்க வாழ்ந்தி ருந்த
       ஒருநாடு திருநாடு வீழ்ந்த தன்றே.