32
ஞாயிறும் திங்களும்
இயற்கைப் பெரியார்
அடித்தளத்தில் சிந்தனைகள் கனிவ ளம்போல்
அடர்ந்தடர்ந்து படர்ந்திருக்கும் தோண்டத் தோண்ட
வெடித்தெழும்பும் அறிவெனும்நீர் அறியா மாந்தர்
விளைக்கின்ற தீமைகளைத் தாங்கிக் கொள்ளும்
பிடித்துழுது பிளப்பதுபோல் துயர்தந் தாலும்
பெரும்பயனே நல்குமிவை நிலத்தின் பாங்கு
படித்தறியா அடிமைகளாய்க் கிடந்தார் உய்யப்
பாடுபட்ட பெரியாரும் நிலமே போல்வார்.
ஆரியமாம் பாறையெலாம் சிதறி வீழ
ஆர்ப்பரித்துப் பாய்கின்ற அருவி நீராம்
பாரிலுளார் தாகத்தைத் தீர்த்து வைக்கும்
பகுத்தறிவு சுரந்துவரும் ஊற்றின் நீராம்
சோறுதர வளப்படுத்த ஊர்கள் தோறும்
சுற்றிவரும் வற்றாத ஆற்றின் நீராம்
பேரறிவுச் சிந்தனையின் ஆழங் காணாப்
பெருங்கடலின் நீரெனவும் பெரியார் ஆனார்
வேண்டாத குப்பைகளை அழிப்ப தற்கு
வேண்டுவதும் நெருப்பேயாம்; இருட்டைப் போக்கத்
தூண்டுவதும் நெருப்பேயாம் அரிசி தன்னைச்
சோறாக்க உதவுவதும் நெருப்பே யாகும்
தீண்டாமை சாதிமதக் குப்பை மாய்க்கும்
தீயாகிப் பகுத்தறிவுச் சுடரைப் பாய்ச்சும்
தூண்டாத விளக்காகி மாந்த ராகத்
தொழும்பர்தமை ஆக்குகிற நெருப்பும் ஆனார்.
உயர்வானில் சிதறிவிழும் கல்லால் பூமி
உருண்டைக்குப் பழுதின்றிக் காக்கும் காற்று
செயலறியா நம்மினத்தார், ஆரியத்தின்
சிந்தனையில் வெடித்துவிழும் கற்கள் தாக்க
மயலாகி அழியாமல் பெரியார் காத்தார்
மாந்தரெனப் பழுதின்றி வாழச் செய்தார்