பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

101


எத்துணை சிறந்ததாக இருந்தது, காலப் போக்கில் எத்துணை மாறுதலுக்கு உட்பட்டிருக்கின்றது என்ற கவலைதான் அதிகமாகின்றது.

தன்னுடைய ஒரே பேறான செல்வமகனைப் போர் களத்திற்கு அனுப்பிவிட்டு, அவன் களத்தின்கண் ஆற்றிவந்த வீரத் திருவிளையாடல்கள் பலவற்றையும் கேட்டுக் கேட்டுத், தான் பெற்ற மகனை நினைந்து நினைந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றாள் ஒரு தாய்! ஆண்டினால் முதிர்ச்சியுற்ற அவளது உள்ளம், தன் மகனின் பெருமையை நினைந்து பூரித்திருந்தது. அவள் பால் வந்து நின் மகன் களத்தே புண்பட்டு வீழ்ந்தான் என்று சிலர் உரைக்கின்றனர். -

அந்தச் சொற்களைக் கேட்டதும் அவள் குமுறுகின்றாள். கொந்தளிக்கும் அவள் உள்ளம் அவளைக் களத்தை நோக்கி இழுத்துச் செல்லத் தளர்நடை கொண்ட அவள், தணியாத ஆர்வத்துடன் தன் மகனின் திருமுகத்தைக் கடைசி முறையாகக் காணும் ஆர்வத்துடன் விரைகின்றாள்.

அந்த வீரனின் பெயர் நெடுங்கோளாதன் என்று தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்க்கினியர் கூறுகின்றனர். நெடுங்கோளாதனின் தாய்தான். அந்த மூதாட்டி, அந்தத் தாயின் மனநிலைதான் எங்ங்னம் வேதனைபட்டு வெதும்பி அவளது உயிரையும் குடித்து விடுகின்றது! அவளுடைய புலம்பலின் ஒலி செய்யுளிலும் எதிரொலிக்கிறது. நம்மையும் சோகக் கடலுள் ஆழ்த்தி விடுகின்றது: .

களத்தே அவளுடன் துணையாகச் சென்றோர், 'தாயே! கிடக்கின்றான், நின் மகன். அவனைப் பாருங்கள்' என்கின்றனர். அந்தத் தாயும் பார்க்கிறாள். மகனைக் காணவில்லை அவள் அவனை மூடிக் கிடக்கின்ற அம்புக் கூட்டங்களைத்தான் காணுகின்றாள். அவ்வளவு அம்புகள் தைக்க அவன் வீழ்ந்தான் என்றால், அவனை அழிக்க எத்துணை பகை மறவர் கணை தொடுத்திருப்பார்கள்! அவர்கள் அங்ங்னம் திரண்டு நின்று கொல்லுமாறு, அவன் எத்துணை அளவிற்கு அவர்கட்கு அழிவினை விளைத்திருப்பான்! செய்யுள் நம்பால் அந்த நினைவுகளையும் நிறைக்கின்றது. .

“என் மகன் இவன் என்பதனை, எதனைக் கண்டு யான் அறிவேனோ! எதனைக் கண்டுதான் இவன் என் மகனென்று அறிவேனோ? இவன் என் மகன் ஆதலைத் தான்யான் எதனைக் கண்டு அறிவேனோ?