பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

23


காட்டிடத்துக்குச் சென்றால், அக்காட்டகம் பயன்படுகின்ற வகைமை எப்படிப்பட்டது”

"அப்படியே எனக்கும், யாதொரு திசையிடத்துச் செல்லினும், அத்திசைக்கண் சோறு தப்பாமற் கிடைப்பதாகும்" என்றனர்.

இதனைக் கேட்ட அதிகமான், தன் அறியாமைக்கு நொந்து கொண்டான். தன்னை வெளிப்படுத்தி நின்று பொறுத்தருள வேண்டியவனாக, ஒளவையாருக்கு வேண்டிய பரிசில்களை அளித்து உபசரித்தான். அவர் மனம் குதுகலத்தால் செறிவுற்றது! அந்தக் கொடைத் திறனை வியந்தது. தாம் கொண்ட அவசர முடிவிற்கு நொந்து நாணங்கொண்டது.

மற்றொரு சமயம், இதே போன்று அதிகமான் பரிசில் நீட்டிக்கப் புலவர் வெகுண்டு வெளியேறக் கண்ட ஒளவையார், அவரைத் தடுத்து நிறுத்தி, அதிகனது பண்பு நலத்தை வெளியிடுகின்றார்.

"அதிகமானிடத்து ஒரு நாளோ இரண்டு நாட்களோ சென்று வந்தவர் யாம் அல்லேம். பல நாட்களும் பழகிப்பலரோடும் கூடிச் சென்றவொரு பழக்கத்தை உடையோம். இருப்பினும் முதல் நாளில் எம்மைக் கண்டபோது விளங்கிய அதே விரும்பினனாகவே அவன் எப்போதும் விளங்குகின்ற தன்மையாளனாக இருக்கின்றான்.

"அழகிய நெற்றிப் பட்டத்தை அணிந்த போர் யானையையும், இயன்ற தேரையும் உடையவன் அதிகமான். அவனிடத்துப் பரிசில் பெறுகின்ற காலம் நீட்டித்த தாயினும் நீட்டாதே போவதாயினும், இரண்டும் ஒன்றுதான். யானை தனது கொம்பினதிடையே வைக்கப்பட்டகவளத்தைப்போல, அவன் பரிசிலும் நம்முடைய கையகத்தது ஆகுமேயன்றிப் பொய்யாகிப் போவதில்லை.

"ஆகவே, உண்ணுதற்கு ஆசைப்பட்ட நெஞ்சத்தை உடையீரே! அது குறித்து நீவிர் வருந்தல் வேண்டா! அவன் தாள் வாழ்வதாக” என்று கூறுகின்றார் (புறம் 10) ஒளவையார். இத்தகைய தமிழன்பிற் தலைசிறந்து நின்றவனாக விளங்கினான் அதிகமான். இதனை அறியும்போது, நம் நெஞ்சம் விம்முகின்றது. தமிழறிந்தாரைப் போற்றிப் புரக்கும் அத்தகைய வள்ளல்கள் இந்நாளில் இலரே என நினைந்து ஏங்குகின்றது. ஒளவை யாருடன் சேர்ந்து, ‘வாழ்க அவன் தாள்' என, நாமும் அவன் நினைவை வாழ்த்துவதற்கு முனைகின்றோம்.