பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சோலை சுந்தரபெருமாள்


என்ன ஆச்சரியம்! பெரியவர் பேசிவிட்டு உட்கார்ந்ததும் ஊர்வசி எழுந்து நின்று, சாவதானமாக, லக்ஷ்மியின் நாட்டியத்தைப் பற்றிப் பேசினாள். நாலைந்து நிமிஷங்களே பேசினாள்; வழக்கமான, சம்பிரதாயமான, சில வார்த்தைகளே சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் தனிப்பட்ட ஓர் அர்த்தம் தொனித்தது. லக்ஷ்மியின் காதில் ஊர்வசி முதலில் எழுந்து எதுவும் பேசுவதாக இல்லை என்றும், ஆனால் சிறுமியாகிய அவள் கால் தடுக்கி விழுந்ததும் அனுதாபம் பிறந்து சிறுமியாதலால் உற்சாகமூட்ட இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும் என்று சொல்லுகிறாள் என்றும் லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. முதலில் ஊர்வசியிடம் அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் ஊர்வசி சிறுமியை ஆசிர்வதித்துத் தன் பேச்சை முடித்தபோது அவள் மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிட்டது. ஊர்வசி உட்கார்ந்ததும் உள்ளம் நிறைந்த ஒரு கனிவுடன் அரங்குக்குள் பிரவேசித்து லக்ஷ்மி சபையையும், ஊர்வசியையும் மறுபடியும் ஒருதரம் வணங்கிவிட்டு ஆட ஆரம்பித்தாள்.

இந்தத் தடவை அவள் மனத்தில் கலையைத் தவிர வேறு எந்த ஞாபகமும் இல்லை.