பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

101


திரும்பிவந்து தலையணையை மாற்றி வைத்துக் கொண்டாள். மெத்தையையும் கவிழ்த்துப் போட்டுக் கொண்டாள். குளிர்ச்சி வேண்டுமே !

ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டால் தேவலைபோல் இருந்தது. சாய்ந்து படுத்த பிறகுதான் இந்த நினைப்பு. எழுந்திருக்கச் சோம்பல். ‘என்னாலே எழுந்திருக்க முடியாது; அது கிடக்கட்டும்' என்று நினைத்தாள். அப்படி நினைக்க நினைக்க நாக்கு உக்கிரமாய் வறட்ட ஆரம்பித்தது.

“சே!” என்று கடைசியாக அலுத்துக்கொண்டே எழுந்தாள். விளக்கைப் போட்டாள். மேஜைமேல் கூஜாவில் தண்ணிர் கொண்டு வந்து வைத்துக் கொள்ளாவிட்டால் அவளுக்குத் தூக்கமே வராது. வழக்கப்படி அங்கேதான் அது இருந்தது. ‘ணங்' என்று தம்ளரை எடுத்து, மடக்கு, மடக்கு என்று இரண்டு வாயாகத் தண்ணிரைக் குடித்துவிட்டுக் கட்டிலுக்கு அருகில் வந்து விட்டாள். கூஜாவை மூடவில்லை; விளக்கை அணைக்கவில்லை. “அட ராமா!” என்று சொல்லிக்கொண்டே திரும்பினாள்.

‘ணங்’

அறைக்கு வெளியிலே திறந்த மாடியில் காற்றுக்காகப் படுத்திருந்த தங்கம்மாள் இந்தச் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டாள். “ருக்கு, தூங்கவில்லையா இன்னும் நீ? பாதி ராத்திரியிலே இப்படி ஏதுக்குத் தண்ணீரைக் கொட்டிக் கொட்டிக் குடிக்கிறே?” என்றாள் அங்கிருந்தபடியே. கொஞ்ச தூரத்தில் ருக்குவின் தம்பி ரங்கன் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.ருக்கு பதிலே சொல்லவில்லை தங்கம்மாள் கவலையுடன் எழுந்து அறைக்குள் வந்தாள்.

“ருக்கு!”

“ம்ம்..”

“பன்னிரண்டரை ஆறது..... என்ன இன்னும்?”

“தாகமாய் இருந்தது; தண்ணீர் குடிச்சேன்.”

“தூக்கம் வரல்லியா? கீழே போகனுமா?”

“ஒண்ணும் வேண்டாம்.”

“பின்னே விளக்கை அணைச்சுட்டுப் படுத்துக்கப்படாதோ?”

“எல்லாம் படுத்துக்கறேன். போ, நீ அனைச்சுட்டுப் போ.

“தூங்கு, காலா காலத்துலே, உடம்பு என்னத்துக்காகும்? நன்றாய்ப் போர்த்திக்கோ.”

“ஏன் அம்மா தொன தொணக்கிறே?”

“ஊஹூம்; தூங்குங்கறேன்.”

“சரிங்கறேன்; தூங்கப் பண்ணிட்டுத்தான் போகப்போறியா?”

“வண்டி போயிடுத்தோ?”