பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சோலை சுந்தரபெருமாள்


நாள் ஓடுவதே தெரியாமல் ருக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தங்கம்மாளின் மன அவஸ்தை கட்டுக்கு அடங்காமல் போய்க் கொஞ்சம் பழகிக் கூடப் போய்விட்டது. அவள் தன் கணவரைப் பார்த்து, அந்தப் பெண்ணுக்கு நல்ல தூக்கமே இல்லை. நீங்களும் பேசாமல் இருக்கேளே?” என்றாள்.

வக்கீலுக்கு இதெல்லாம் அற்ப விவகாரங்கள். விசாரணை ஒத்திப்போடச் சமாதானம் சொல்வது அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு. "வந்து நாளாச்சோ இல்லையோ; சிறிசுகள் அப்படித்தான்.” "இப்பொன்னா நாளாச்சு; வந்ததிலேருந்து அப்படித்தான் இருக்கா”

"வந்த புதிசு அப்போ. தனியாக வந்ததும் அப்படித்தான் இருக்கும்.”

எல்லாம் தெரிஞ்சதுபோலத்தான்!' என்று எண்ணிக்கொண்டே தங்கம்மாள் போய்விட்டாள். தன்னைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டாமல் இருப்பது அவளுக்கு மிகுந்த கவலையாய் இருந்தது.

திடீரென்று நாலைந்து நாள் முன்னதாக ருக்கு அவளிடம் வந்து, "அம்மா, அவர் வரப்போறார் போலிருக்கு” என்றாள்.

“யாரு, உன் அகமுடையானா?" “ஆமாம்.” "அழைச்சிண்டு போறதுக்கா?” "ஆமாம். திருப்திதானே ?” திருப்தி என்ற வார்த்தையை அழுத்தமாகக் கூறினாள்.

தங்கம்மாள் முகம் பேயறைந்தது போல ஆயிற்று. "என்னடியம்மா திருப்தி எனக்கு, உன்னை ஊருக்கு விரட்டறதிலே? நீ இங்கே இருக்கிறது எங்களுக்கெல்லாம் கொள்ளைத் திருப்திதான். ஆனால் பூவும் மணமுமா, புருஷனோடே இருக்காங்கிறதைக் கேட்டா அதைவிடத் திருப்தி இல்லையா?” என்றாள், மென்று விழுங்கிக் கொண்டே.

ஆனால், அன்று காலையில் வேணுவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. “லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

"இது என்ன, உன் அகமுடையானுக்கு, மொட்டைத்தாத்தாதன் குட்டையிலே விழுந்தான் என்கிறாப்போல அடியும் இல்லாமே முடிவும் இல்லாமே இரண்டு வரி! அழைச்சிண்டு வந்த ரங்கனுக்கு மட்டும் கொண்டுவிடத் தெரியாதா?” என்றாள். மீண்டும் அவளை அந்தக் கடிதம் பழைய கவலைக்குள் ஆழ்த்திவிட்டது.

அறையினுள், 'ணங்...' என்று ஓசை கேட்டது. "ருக்கு!" "ம்".