பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தி. ஜானகிராமன்

ஞ்சை மாவட்டம் தேவங்குடியில் பிறந்த தி. ஜானகிராமன் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு, ஆசிரியப்பயிற்சி, வடமொழி அறிவு, சிறந்த இசைஞானம், இத்தனையும் பொருந்தியவர். தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை இரண்டு துறையிலும் சாதனை படைத்திருக்கிறார்.

"கு.ப.ரா வின் அடிச்சுவட்டில் வந்த நான்கு பேரில் இவருடைய சிறுகதைப்பாணி மற்றவர்களை விட மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. இவருடைய கதைகளில் பல, வடிவ முழுமை பெற்றிருக்கின்றன. வடிவத்தை மீறிய சில கதைகள் உள்ளடக்கத்தின் சிறப்பினாலும் கதை சொல்லும் நடையினாலும் வாசகர்களைக் கவருகின்றன. வாழ்வில் தம்மையறியாமல் அசட்டுத்தனம் செய்யும் மனிதர்களை அனுதாபத்தோடு பார்த்தும், அத்தகையவர்களைப் பயன்படுத்தும் சாமர்த்தியசாலிகளைப் பரிகாசம் செய்து குறைகளை எடுத்துக்காட்டியும் கதை மாந்தர்களைப் படைப்பதில் ஜானகிராமன் சிறந்த வெற்றி பெற்றிருக்கிறார். ஆண், பெண் உறவைப் பொறுத்தமட்டில் இவருடைய கதைகளில் கு.ப.ரா. வின் பாதிப்பு அதிகமாகக் காண முடிகிறது. இவருடைய கதைகளில் காணும் மற்றொரு சிறப்பு, பாத்திரங்களின் உரையாடலின் நடுவே புகுந்தும் சிறு மௌன இடைவெளிகளின் மூலம் வெறும் சொற்களால் முடியாத ஆழமான -- அனுபவத்தை வெளிப்படுத்துவதாகும். இவர் கதைகளில் நமக்குப் பழக்கமான பாத்திர அச்சுகள், மனித இயல்பை, நமக்குத் தெரிந்த முறையில் வெளியிடுவதைக் காணலாம்” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

"ஜானகிராமனை நாவலாசிரியராக - மதிப்பதைவிடச் சிறுகதை ஆசிரியராகக் கருதுவதுதான் விமரிசகனான எனக்கு சரியென்று தோன்றுகிறது...” என்று க.நா.சு அபிப்பிராயப்படுவது ஒருபக்கப் பார்வை என்று அவரின் ஒட்டுமொத்த படைப்புகளை படிக்கிறபோது தெரியவரும்.