பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோபுரவிளக்கு


திடீரென்று கண்ணைக் கட்டிவிட்டாற்போல் இருந்தது; அவ்வளவு இருட்டு, கிழக்குத் தெருவின் வெளிச்சத்தில் நடந்து வந்ததால் அந்த திடீர் இருட்டு குகை இருட்டாக காலைத் தட்டிற்று. சந்நிதித் தெரு முழுதும் நிலவொளி பரப்பும் கோவில் கோபுரத்தின் மெர்க்குரி விளக்கு அவிந்து கிடந்தது. நட்சத்திரங்களின் பின்னணியில் கோபுரம் கறுத்து உயர்ந்து நின்றது. கோயிலுக்குள் நீண்டு ஒளிரும் விளக்கு வரிசையில் லிங்கத்தைச் சுற்றிய ஒளிவட்டமும் காணவில்லை. கோவில் பூட்டித்தான் கிடக்கவேண்டும். ஏதாவது நாயை மிதித்துவிடப் போகிறோமே என்ற கவலையில் தட்டித் தடவி வீட்டு வாசலை அடைந்தேன்.

"பூஜை இல்லேன்னா கதவை அடைச்சுக்கட்டும். இந்த விளக்கைக் கூடவா அணைச்சுடணும்?" என்று எதிர் வீட்டு பந்தலிலிருந்து குரல் கேட்டது.

"பஞ்சாயத்தும் கேட்பாரில்லாத நாட்டாமயாப் போயிடுத்து. இருக்கிறது ஒரு விளக்கு தெருவுக்கு, அதுவும் ப்யூசாயிடுத்து.. ஒரு வாரமாச்சு, நாதியைக் காணோம்”- என்று நாட்டு வைத்தியரின் குரல் கீழண்டை வீட்டு வாசலிலிருந்து புலம்பிற்று.

"கோயிலில் விளக்கு எரிஞ்சுண்டிருக்கும். இந்த பஞ்சாயத்து. பல்பு எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்னு மினுங்கிண்டிருக்கும், மத்தியானத்திலே சந்திரன் இருக்கிற மாதிரி. இன்னிக்கு சூரியனே அவிஞ்சு போயிட்டான். மானேஜர் இதை அணைச்சிருக்க வாண்டாம். யாராவது வந்து சொல்லட்டும்னு இருக்கார் போலிருக்கு...”

அந்த 'யாராவது'க்கு அவரைத் தவிர யாராவது என்றுதான் அர்த்தம்! இந்த அற்ப விஷயத்திற்காக மானேஜரை போய்ப் பார்க்கும் கௌரவத்தை அவர் தலையில் போட்டுக் கொள்ளமாட்டார். நாட்டு வைத்தியர் அவரைவிட பெரிய மனிதர். நாட்டுவைத்தியம் அவருக்கு பொழுதுபோக்கு. 'நான் இருக்கிறேன், சுனச்சேபன். எனக்கு இதைவிட என்ன வேலை? பார்த்தால் போகிறது.'