பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

115


ஆளா கொண்டு வந்து விடுன்னா விடத்தானே வேணும் அது?"

"அந்தப் பொண்ணு அழுதுண்டே வேண்டிண்டுது. கொஞ்சம் மனசுக்குள்ளேயே வேண்டிக்கப்படாதா? தன்னை அறியாமல் கஷ்டம் பொறுக்காமல் புலம்பியிருக்கு. என் காதிலே விழுந்து, உன் காதிலேயும் விழுந்து சிரிப்பா சிரிக்கணும்னு இருக்கு! வேறென்ன?"

“நீங்க வர்றதை பார்த்துட்டுதான் அப்படிக் கொஞ்சம் உரக்க வேண்டிட்டாளோ என்னமோ?

"அப்படி இருந்திருந்தா உன்னளவு சமாசாரம் எட்டி விடுமா என்ன?"

"பேஷ் அவ்வளவு கெட்டிக்காரரா நீங்க? வாஸ்தவம் தான். உங்களுக்கு தாராள மனசுதான். கையிலேதான் காசு இருக்கிறதில்லை. அதனாலேதான் அனுதாபம் இங்கே வந்து அருள் பிரவாகமாக ஓடறது!"

"போருமே! நீ பேசறது வேண்டியிருக்கலெ. இங்கிதம் தெரியாம என்ன பேச்சு இது?”

"யார் அந்தப் பொண்ணு?"

"யாரோ தெரியலெ. கறுப்பா உசரமா சுருட்டை மயிரா இருக்கு. முகம் கலையா இருக்கு...

"கறுப்பா உசரமாவா? "ஆமாம்"

"பல்லு கோணலா இருக்குமோ?" "அதென்னமோ பல்லை பார்க்கலை நான்.

"யாரு அது? வேடிக்கையா இருக்கே!”

"வாசலோடு கூட அடிக்கடி போகும்.”

மறுநாளைக்கு அந்தப் பெண் வாசலோடு போனாள். கூட அவள் தாய் போய்க் கொண்டிருந்தாள். அவசர அவசரமாக கௌரியைக் கூப்பிட்டேன். அவள் வருவதற்குள் ஜன்னல் கோணத்தை விட்டு அவர்கள் போய்விட்டார்கள். வாசலுக்கு ஓடிப்போய்ப் பார்க்கச் சொன்னேன்.

கௌரி ஒரு நிமிடம் கழித்து வந்தாள்.

"இதுவா? இது கிரிசை கெட்டதுன்னா!. இதுக்குத்தானா இத்தனை புலம்பினேள்?”

"யாரது? உனக்குத் தெரியுமோ?"

"தெரியறது என்ன? குளம், சந்தி, கடைத்தெரு, எங்கே பார்த்தாலும் நிக்றதே. காலமே கிடையாது. மத்தியானம் கிடையாது. ராத்திரி கிடையாது. எடுப்பட்ட குடும்பம்!"

"அதுதான் தெரியறதே அவா யாருன்னு கேக்கறேன்.”

"யாருன்னா? முருங்கைக்காயின்னா முருங்கைக்காய் தான். எந்த ஊரு.? எந்தக் கொல்லை- இதெல்லாமா கேக்கணும்?"