தஞ்சைமாவட்டம் திருவையாறுக்கு பக்கம் உள்ள கிராமத்தில் பிறந்த சுப்ரமணியராஜூ, படித்து பட்டதாரிகளாய் புதிய வீச்சுடன் இலக்கிய பிரவேசம் ஆன இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
தனிமனிதனின் பிரச்சனைகளே சமுதாயத்தின் பிரச்சனையாகிறது. ஆகவே தனிமனிதனின் உணர்வுகளை அனுதாபத்துடன் பரிசீலிப்போம் என்ற நோக்கத்துடன் சிறுகதைகளைப் படைத்த இளைஞர்களில் இவரும் ஒருவர். படைப்பின் கதையம்சம் மிகக் குறைவாக இருப்பினும் புதிய தலைமுறைகளுக்கு அந்த நிலைகளுக்குப் பொருள்கான அவர்கள் மேற்கொள்ளும் ஆத்ம விசாரணையும் வெளிப்பட்டிருக்கிறது.
‘கசடதபற’ இதழில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டவருக்கு மாலன் தலைமையில் வெளிவந்த ‘வாசகன்’ இதழ் இவரை விரிவான இலக்கிய பார்வைக்கு இட்டுச் சென்றது.
மிகச் சின்னவயசிலேயே சாலை விபத்தில் காலமாக இவர் நீண்டகாலம் வாழ வாய்ப்பிருப்பின் இலக்கியத்தில் சிலபல சிகரங்களை நிச்சயம் தொட்டிருக்க முடியும் என்பதை வெளிவந்திருக்கும் அவரது படைப்புகள் கட்டியம் சொல்லுகின்றன.
‘இன்று நிஜம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இந்த தொகுப்பு இலக்கியவாதிகளால் பெரிதும் பேசப்பட்டது. நவீன கவிதையில் அழுத்தமாக கால் ஊன்றியவர் என்று சொன்னால் மிகையில்லை.