பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

சோலை சுந்தரபெருமாள்



“பொறுங்க, வாந்தியெடுத்துவிடாதீர்கள்” கிண்டல்காரன் பேச்சை முடித்தான். இவ்விதமாக திலோத்தமை பட விமர்சனங்களோடு அந்தக் கூட்டம் நகர்ந்தும் - சிதறியும் - வர வரக்குறைந்தும் - தேய்ந்தும் கொண்டிருந்தது. நடக்கும் பொன்வண்டுகள் பறக்கும் பட்டுப் பூச்சிகளாயின. காலேஜ் வேடர்களும் வேறு பக்கம் திரும்பினர்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி சின்னச்சாமியும், காந்தாவும் வந்து கொண்டிருந்தார்கள். காந்தாவின் கண்கள் கலங்கரை விளக்கு போலச் சுற்றியபடியிருந்தன.

“உ.ம்...பாத்து நட!” சின்ன சாமி அதட்டினான். சின்னச்சாமி போலீஸ்காரன். வயது நாற்பது இருக்கும். வலுவேறிய உடம்பு வாட்டமற்ற நடை. திருண்டு உருண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சு, கம்பிரமான தோற்றம் கண்களிலே எப்போதும் சிவப்புநிறம், கறுப்புக் குலையாத மீசைகள்.

காந்தா அவனுடைய வேகமான நடையோடு போட்டி போட முடியாமல் திணறித் திணறிப் பின்தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நடமாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகையடித்துக் கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னசாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக்குக் கீழ்ப்புறமாகச் சிறிது தூரம் சென்றால், போலீஸ் லைன். அங்கே 18-வது எண்ணுள்ள வீடுதான் சின்னசாமியுடையது.

“காந்தா! கீழே பார்த்து வா. பூச்சி, பொட்டு இருக்கும்.” இதைச் சொல்லியபடி கொஞ்சம் மெதுவாக நடந்தான். பின்னால் திரும்பிப் பார்த்தபடி, வீட்டையடைந்ததும் சின்னச்சாமி பூட்டைத் திறந்துவிட்டு நெருப்புக் குச்சியைக் கொளுத்தினான். காந்தா விளக்கை ஏற்றிக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். போலீஸ் லைன் வீடுதான் நமக்குத் தெரியுமே; குருவிக்கூடு! அடுக்களை படுக்கையறை எல்லாம் ஒன்றுதான்.

சின்னசாமி செருப்புகளைச் சுழற்றிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி வாயிலில் உட்கார்ந்தான். பீடியின் சுருள் புகையோடு அவன் சிந்தனையும் ஒரு சுற்றுச் சுற்றியது. அதற்குள்-

“அப்பா சோறுபோட்டுட்டேன்” என்ற காந்தாவின் அழைப்பு கிடைத்தபடியால் பாதி பீடியை அனைத்துத் தீப்பெட்டியில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றான் சின்னச்சாமி.

மார்கழி மாதக் குளிருக்கேற்ற நல்ல பழைய சோறு; விறுவிறுப்பாகச் சுண்டக்குழம்பு சாப்பாடு முடிந்தது.