பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

177



“நீ சாப்பிடம்மா” என்று சொல்லிவிட்டுச் சின்னச்சாமி மீதி பீடியை வாயில் வைத்தபடி வெளிப்பக்கம் வந்தான். வயிற்றின் ஜிலுஜிலுப்பை பீடிப்புகை சிறிது மாற்றிக் கொண்டிருந்தது.

காந்தாவின் சாப்பாடு முடிந்ததும் பாத்திரங்களைக் கழுவி விட்டுப் படுக்கிற இடத்தைக் கூட்டினாள். இரண்டு கிழிந்த பாய்களை எடுத்து விரித்து, எண்ணெய் வாசனை வீசுவது மட்டுமின்றி, உறை தேவையில்லை என்கிற அளவுக்கு நிறத்தைக் கருப்பாக மாற்றிக்கொண்ட தலையணைகளை எடுத்துப் போட்டாள்.

“அப்பா நான் படுக்கட்டுமா?”

“ஒரு டம்பளர் வெந்நீர் கொடு. இருக்கா?”

“பச்சத் தண்ணிதான் இருக்கு. வெந்நீர் போட விறகு ஏது?” முணுமுணுத்தபடி ஒரு குவளைத் தண்ணீரைக் கொடுத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

தெருப்பக்கம் உட்கார்ந்திருந்த சின்னச்சாமியின் உதட்டில் இன்னொரு பீடி அமர்ந்து கொண்டது; பீடியைப் புகைத்தவாறு நிமிர்த்திய தலையைத் தாழ்த்தாமலே உட்கார்ந்திருந்த அவனிடம், வான வெளியில் மேகத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிய சந்திரன் பேசுவது போலிருந்ததோ என்னவோ, அவன் வைத்த விழியை எடுக்காமல், அசைவற்றிருந்தான்.

சந்திரன்! சின்னச்சாமியின் மனைவியின் பெயர்கூடச் சந்திராதான். அவள் மண்ணோடு கலந்து பத்து வருடமாகிறது. சின்னச்சாமியின் முப்பதாவது வயதில் சந்திரா பத்து வயது நிரம்பப் பெறாத காந்தாவைத் தாயில்லாப் பிள்ளையாக்கி விட்டுப் போய்விட்டாள். தகப்பனார் உயிரோடிருந்த காலத்தில் சின்னச்சாமிக்குச் சந்திராவை எப்படியோ கல்யாணம் செய்து வைத்துப் பார்த்துக் கண்ணை மூடினார். இடையே சாவு தன் கொடிய கரங்களை நீட்டிச் சந்திராவின் கழுத்தை நெறித்தது மட்டுமின்றிக் காந்தாவைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை அந்தப் பரிதாபத்துக்குரிய போலீஸ்காரருக்குக் கொடுத்துச் சொன்றது. மறு கல்யாணம் செய்து கொள்ள எத்தனையோ முறை முயன்று பார்த்தான். முன்னுாறு ரூபாய் கூட இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவது! கஷ்டப்படும் போது- கண்ணீர் விடும்போது-கதியில்லயே எனக் கதறும் போது கைகொடுக்க வராத உறவினர்கள் கல்யாண மென்றால் நாக்கைத் தட்டிக்கொண்டு வருவார்கள். பத்திரிகை தராவிட்டால் பல்லைக் கடிப்பார்கள். இந்த நிலையில் ஏழைக்குக் கல்யாண எழவா?...

அப்போதைய போலீஸ் சம்ளபத்தைத்தான் கேட்க வேண்டியதில்லை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். இதில் நோய் நொடிகள் ஏற்பட்டால், டாக்டர் தர்மவானாக