பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

189


நடையும் தளர்ந்து தொய்ந்தன. ஆவலும், தயக்கமும் முன்னும் பின்னுமாக மாறி மாறி இழுக்க அவள் நடந்து வந்தாள்.

சன்னதித் தெருவைத் தாண்டி தேர்முட்டியை அடைந்தாள். பின், திருக்குளத்துப் படித்துறையிலிருந்து நேர் கிழக்காகச் செல்லும் ராக்கப் பிள்ளைத்தெருவில் புகுந்தாள். தெற்கு வடக்காகச் செல்லும் அந்த நீண்ட தெருவின் தென் கோடியிலேயே முத்துத்தாண்டவனின் வீடு இருந்தது. வீடு நெருங்க அவள் துடிப்பும் அதிகமாகியது. வீட்டு வாசலுக்கு முன், தெரு மணலில் வேப்பமரத்து நிழலில் முத்துத்தாண்டவனின் குழந்தை நடைவண்டி உருட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தை செல்வனை அவன் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.

குழந்தை நடைவண்டியை உருட்டிவாறு தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அலங்காரத்தைப் பார்த்து தன் பிஞ்சுக்கைகளை நீட்டி “அம்மா’ “அம்மா” என்று அழைத்தது. அக்குழந்தையின் கண்ணும், மூக்கும், சாயலும் முத்துத்தாண்டவனையே உரித்து வைத்ததுபோல் இருந்தது.

ஆறடி உயரம், பொன்னிறமான மேனியும், கருகருவென்று கழுத்து வரை வளர்ந்து கிடக்கும் சுருண்ட கிராப்புமாய் இன்றைக்குக் காட்சிதரும் முத்துத்தாண்டவன் சிறுபிள்ளையாக இருந்தபோது இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கிற மாதிரி அக்குழந்தையின் சாயல் அவனைப் போவே இருந்தது. குழந்தை செல்வனின் குறுகுறுத்த விழிகளில் இலட்சியத்தைத் தேடி அலையும் முத்துத் தாண்டவனின் கம்பீரமான உருவமே அவளுக்குத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சவேண்டும் என்ற ஆர்வத்தோடு அலங்காரம் நெருங்கினாள்.

அப்பொழுதுதான் ஜன்னல் ஓரமாக நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த வடிவு எதிர்பாரத நிலையில் அலங்காரத்தைக் கண்டாள். வடிவு ஜன்னல் வழியாகத் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்று அறியாத அலங்காரம் நடைவண்டி உருட்டும் சிறுவனை வாரி எடுத்து, உச்சி மோந்து முத்தம் கொடுத்தாள். அந்தக் காட்சியைக் கண்ட அந்தக் கணத்தில் வடிவின் மனம் நெகிழ்ந்தது. அலங்காரத்தின் தோள் மீது சாய்ந்த குழந்தை அவள் கழுத்தைக் கெட்டியாக இறுக்கிக்கொண்டு தன் மழலை மொழியில் “அம்மா” “அம்மா” என்று அழைத்தது. அதுவரை தன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த அழுக்காறு, வன்மம், தப்பபிப்பிராயம் எல்லாம் ஒரே நொடியில் கரைய வடிவு புதிய பிறவி பெற்றவள்போல் மனம் சிலிர்த்தாள். ஏதோ ஓர் உணர்வின் விழிப்பில் உந்தப்பட்டவள்போல் அவள் வாசலுக்கு விரைந்து வந்தாள்.