பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

201



“ஒரு மகன் இருந்தான். அவன் இரண்டாவது யுத்தத்திலே காலமாயிட்டான். அவன் குழந்தைகளும், மருமகளும் என்னோடு பஸ்தியிலே இருந்தார்கள். ஏதோ காரியமாய் நான் வெளியூர் போயிருந்தேன். அது ராஜாக்கர் கலவர சமயம். எங்க வீடுகளுக்கெல்லாம், நெருப்பு வெச்சிட்டாங்க. வீட்டில் வெள்ளிப் பணமாக இரண்டாயிரம் கல்தார் ரூபாய் வெச்சிருந்தேன். அவ்வளவும் மண்ணோடு போச்சு.”

“கல்தார் பணம் என்றால் என்ன?”

“அப்போதெல்லாம், அதாவது வெள்ளைக்காரன் நாளிலே இந்த ஊரில் ரெண்டு தினுசுக் காசு இருந்தது. நைஜாம் பணத்துக்கு ஹாலின்னு பேரு. வெள்ளைக்காரன் காசைக் கல்தார் இன்னு சொல்வோம். இப்போ நீங்க இருக்கிற வீடுகளிலெல்லாம் துரைமார்கள் இருந்தாங்க. அப்போதிலிருந்து நான் இங்கேதான் இருக்கேன். அவுங்க இந்த வேர்க்கடலையை மங்கி நட்ஸுன்னு சொல்லிப் பிரியமாய்த் தின்னுவாங்க.”

“தாத்தா உனக்கு ரொம்ப வயசாயிருக்குமே?”

“ஆமாம்மா, நீங்களே பாருங்களேன்.” அந்தோணி தன் சட்டைப் பையிலிருந்து இளஞ்சிவப்பு வர்ணப் பென்ஷன் கார்டை வெளியில் எடுத்துக் காட்டினான். அதில், ஜோஸப் அந்தோணி, முனையனூர், திருச்சி ஜில்லா, பிரிட்டிஷ், இந்தியா” என்று எழுதியிருந்தது. அந்தோணியின் பிறந்த தேதி ஆகஸ்ட் ஏழு, 1872.

“உனக்கு என்ன பென்ஷன் கிடைக்கும்?”

“மாசம் பதினஞ்சு ரூபாய்.”

“அது எப்படி உனக்குப் போதும்?”

“அதனால் தான் அம்மா, இப்படி வேர்க்கடலை வித்துப் பொழைக்கிறேன். கர்த்தர் படி அளக்கிறார். ஒரு கர்னல் துரை வீட்டு அவுட் ஹவுஸிலே படுக்கிறேன்.” அந்தோணி வானத்தை நோக்கிக் கையை உயர்த்திக் காட்டினான்.

“முஷீராபாதில் வயதானவர்களுக்கான விடுதி இருக்கிறதல்லவா, அங்கே போய்த் தங்கலாமே!”

“கர்த்தர் உடலில் வலுவைக் கொடுத்திருக்கிறார். உடம்பிலே தெம்பு இருக்கும் வரையில் பிறர் ஆதரவில் இருக்கக்கூடாது; அது பிசகம்மா. இந்த ஊருக்கு நாற்பது வருஷத்துக்கு முந்தி வந்தேன். இங்கேயே தங்கிவிட்டேன்.” அந்தோணி பழைய நினைவுகளில் மூழ்கி உரை செய்தான். “அதோ, மெளலா அலிக்குப் பக்கத்திலே மெஸ் இருக்குதே, அங்கே சர்ச்சில் துரை கூடத் தங்கி இருந்தாராம்மா. நான் அவருக்கு ஆர்டர்லியாக இருந்திருக்கிறேன்.”

“நிசமாகவா தாத்தா?”