பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

சோலை சுந்தரபெருமாள்


தெலுங்கானா பிரதேசத்தின் சிறப்பான இயல்பு. அங்கே உள்ள பல சமய, மொழி இனங்களின் அபூர்வமான கலவையாகும். வெளியிலிருந்து புதிதாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அது தெளிவாகப் புலப்படும். இந்திய நாட்டின் பொதுவான பண்பாடு இங்கே திகழ்ந்தது. பருவகால மாறுதல்கள் கூட, இங்கே ஆடம்பரம் இன்றி வரும், போகும்-இங்கு வாழ் மக்களின் இயல்புபோல.

கிறிஸ்துமஸ் இந்த ஊரின் சிறப்பான பண்டிகை. இங்கே முன்பு நிறைய வெள்ளைக்காரர்கள் தங்கியிருந்தனர். அவர்களுடைய சமயப் பணியினால் சுற்றிலும் நிறைய மாதா கோயில்கள். பல எளிய மக்கள் கிறிஸ்துவ தர்மத்தைத் தழுவியவர்கள்.

பண்டிகையை முன்னிட்டு அடுத்த வீட்டு ராபர்ட் சூரியனின் தம்பி தம் துணைவி, குழந்தைகளுடன் வந்திருந்தார். டெல்லியில் உயர்ந்த பதவி வகித்து வந்த அவர் குழந்தைகளுக்கு நிறையப் பரிசுப் பொருள்கள் வாங்கி வந்திருந்தார். குழந்தை டெய்ஸி அன்று தன் சட்டையில் ஓர் அழகிய ஊசிப் பதக்கத்தை அணிந்திருந்தாள். அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன். பொன் விளிம்புடைய எனாமல் தகட்டில் இயேசுநாதரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இருந்த குவி கண்ணாடியினால் உருவம் பன்மடங்காகித் தெரிந்தது. அழகான வேலைப்பாடுள்ள பொருள்.

அப்போது அந்தோணித் தாத்தா எங்கள் வீட்டில் பூட்ஸுகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவர் டெய்ஸியை நோக்கி, “இதைத் தாத்தாவுக்குத் தரலாமோ?” என்று வேடிக்கையாகக் கேட்டார்.

“ஊஹீம். கொச்சம்மைக்கித் தேஷ்யம் வரும்; அது என் கொச்சம்மை கிறிஸ்மஸ்ஸுக்குத் தன்னதாணு!” பதக்கத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள் டெய்ஸி.

நான்கு நாட்கள் சென்றன. அன்று தேதி டிசம்பர் இருபத்துநான்கு. மறுநாளைத் திருநாளுக்காகப் பனியாரங்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். திராட்சை கேக், ஆரஞ்சு ரொட்டி, கோகோ சாக்லட் எல்லாம் செய்தேன். இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் காகிதத்தில், மடித்து வைத்தேன். ரோஸியை அழைத்துத் தாத்தாவைக் கூப்பிடும்படி கூறினேன். சூரியன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த தாத்தா தம் கை வேலையை விட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நான் தந்த தின்பண்டங்களைப் பெற்றுக்கொண்டு திரும்பினார். மறுபடியும் வேலையில் ஆழ்ந்துவிட்டேன். ஒருமணி நேரம் சென்றிருக்கும். அடுத்த வீட்டில் யாரோ இரைந்து பேசுவது கேட்டது. என் கணவர் அங்கே சென்று திரும்பினார். “என்ன விசேஷம்?” என்று கேட்டேன்.