பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

205



“ஏதோ தங்க புருச்சாம். அதை டெய்ஸியின் தங்கையுடைய சட்டையில் குத்தியிருக்கிறார்கள். அதைக் காணோம் என்று தேடுகிறார்கள்.”

“அடாடா. அது மிக நன்றாக இருந்ததே!” என்று அங்கலாய்த்தவாறு நானும் அங்குச் சென்றேன்.

சூரியன் கடுங்கோபத்துடன் குதித்துக் கொண்டிருந்தார். திருநாளும் அதுவுமாக விலை உயர்ந்த பரிசுப்பொருள் காணாமற் போனது அவருக்கு வருத்தம் தந்தது. “டெய்ஸி எங்கே?” என்று அவள் தாயாரைக் கேட்டேன்.

“தன் கொச்சப்பனோடு அம்பலத்துப் போயி, இப்பளே போயி என்றாள் மரியாள். எனக்கு இப்போதெல்லாம் மலையாளம் புரிந்தது. சூரியனின் வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் காணாமற்போன பொருளைத் தேடத் தொடங்கினோம். அந்தோணித் தாத்தா கடைசி வீட்டில் வேலை செய்து விட்டு வெளிவாசல் வழியாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். சூரியனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை; “ஏய், இவடே வா” என்று அந்தோணியை விளித்தார்.

“இந்தக் குழந்தைக்கு இட்டிருந்த பொன் புரூச்சைப் பார்தாயா?”

“இல்லை சார் நாலு நாள் முன்னால் டெய்ஸி ஒரு பதக்கம் போட்டிருந்ததைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்ததுங்களே அது.”

“இந்தா, இந்தக் கதை எல்லாம் வேண்டாம்; உள்ளதைச் சொல்லு.”

சூரியனின் முகபாவத்திலிருந்த குரூரத்தைக் கண்டு தாத்தா ஒரு கணம் திகைத்தார். “நான் எதையும் பார்க்கவில்லை ஸார்” -அமைதியாகப் பதிலளித்தார்.

“எங்கே, நின்னொட சஞ்சியை ஞான் காணட்டும்!”

அந்தோணியின் உடல் குன்றியது. அது ஒரு சிறிய கித்தான் பை. சூரியன் அதனுள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்தார். ஒரு கந்தைத் துணி, நான் கொடுத்த தின்பண்டங்கள், இரண்டு பாலிஸ்டப்பா, பித்தளைவிளக்கி டின், இரு பிரஷ்;. பிறகு...அது என்ன?...பளபளவென்று அதே தங்கப்பதக்கம், டெஸ்ஸியினுடையது. அந்தோணி அவமானத்தினால் செயலற்று நின்றார்.

“கள்ள நாயே!” சூரியன் அந்தப் பையை வீசி எறிந்தார். அந்தோணியை அடிக்கப் போனார். தாத்தா விலகிக் கொண்டார். - “சார் நிசம்மாச் சொல்லுறேன். இது என் பையில் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது; கர்த்தர் சாட்சியாகத் தெரியாது.” தாத்தா சிலுவைக் குறி செய்து கொண்டார். அவருடைய கண்களில் நீர் நிறைந்தது.