பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

சோலை சுந்தரபெருமாள்



சூரியனின் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கிற்று. அவர் தாத்தாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினார். “சார், மிஸ்டர் சூரியன், தாத்தாவை விட்டு விடுங்கள். வயதான கிழவர்; உங்கள் பொருள்தான் கிடைத்துவிட்டதே!” என் கணவர் சூரியனைத் தடுத்து விலக்கினார்.

“எல்லாம் உங்களோட வார்த்தைகேட்டு வந்ததாணு. கண்டநாயெல்லாம் குவார்ட்டர்ஸில் வருன்னு. போனடா கள்ளா; இனி இந்தப் பக்கம் வாரம்பாடில்லா!” சூரியன் உறுமினார்.

தாத்தா என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். திரும்பி நடந்தார். அவருடைய பையும் நான் கொடுத்த பனியாரங்களும் தரையில் கிடந்தன. நாங்கள் வீட்டிற்குள் சென்றோம்.

...அந்தோணி மெல்ல நடந்தார். அவமானத்தின் கமை அவரைத் தள்ளாடச் செய்தது. தொடர்ந்து நடக்க முடியாமல் தெருப்பாலத்து மதகின்மேல் உட்கார்ந்தார். இதுநாள் வரை அவர் கண்ட நல்வாழ்வின் அனுபவங்கள் யாவும் அவர் கண் முன்பு நின்றன. அவருடைய உள்ளத்து நரம்புகளில் எதோ ஒரு ஆட்டம் கொடுத்துவிட்டது. அமைதியுடன் மதகுச் சரிவில் சாய்ந்தார். வாய் கோணிக் கோணி இழுத்தது.

மாதா கோயிலிலிருந்து டெய்ஸி தனது சிற்றப்பாவுடன் திரும்பியதைப் பார்த்தேன். சற்ற நேரத்திற்கெல்லாம் சூரியன் வீட்டிலிருந்து உரத்த பேச்சுக்குரல் கேட்டது. நானும் என் கணவரும் அடுத்த வீட்டு வாசலில் போய் நின்றோம். டெய்ஸி பேசிக்கொண்டிருந்தாள்.

“தாத்தா கள்ளனல்ல, ஞானாணு ஆ. ப்ரூச்சை அவனடெ சஞ்சியில் இட்டு. தாத்தா இப்போள் எவடே போயி!”

என்னுடைய நெஞ்சில் சில்லிப்புப் பாய்ந்தது அவமான உணர்ச்சி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

பண்டிகைக்காக நாங்கள் தாத்தாவுக்கு வாங்கியிருந்த புதுத் துணிகள் அவருக்கு ஈமக் கோடி ஆயின. கல்லறைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் எங்களுடைய தபால்பெட்டி நிறைந்து கிடப்பதைக் கண்டோம். அவற்றில் ஒன்று என் மேல்பார்வையிட்டு அந்தோணிக்கு வந்திருந்தது. அது ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதம். இங்கிலாந்து தேச முத்திரை பொறித்திருந்த அந்த உறையினுள் ஒரு வாழ்த்துச் செய்தி இருந்தது. அதன் முகப்பு வாசகம் என் உள்ளத்தை உருக்கியது.

“யாருக்காக நீ முள் முடி தரித்து வசைகள் எய்தினாயோ...”

அதை அனுப்பியவருடைய பெயரைக் கவனித்தேன். “வின்ஸ்டன் சர்ச்சில்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது.

பட்டாளக்காரன் பொய் சொல்லுவதில்லை!