பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நெருடலை மீறி நின்று

சந்தோஷமாயிருக்கிறது. ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இருபத்துநாலு வயசில் இன்றுதான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. இன்னும் அந்த மோட்டார் பைக் சத்தம், தூக்கித் தூக்கிப் போடுகிற அனுபவம், அறுபது மைல் வேகத்தில் புடவைத் தலைப்பை அடக்க முடியாமல் தலைமுடியைக் கோத முடியாமல் காலை மாற்றிக்கொள்ள முடியாமல், பிடித்த பிடியை விடமுடியாமல், நெஞ்சு முழுக்க பயத்தோடும், ஆனந்தத்தோடும் சவாரி செய்தது இன்னும் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கிறது.

லேசான பெட்ரோல் வாசனையும், சூடான எஞ்சின் நெடியும், ஷேவிங் க்ரீம் மாதிரி ஏதோ ஒரு சுகந்தமும் இன்னும் மூக்கருகே வட்டமிடுகின்றன. இது மொத்தமும் கலந்து ஒரு ஆண் வாசனையாய் மனசுக்குப்படுகிறது. இத்தனை நெருக்கமாய் இதுநாள் வரை நான் யாரோடும் உட்கார்ந்ததில்லை. என் நினைவுக்குத் தெரிந்து அருகே நின்றதுகூட இல்லை. பேசினது இல்லை. பழகினது இல்லை. முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தது இல்லை. யாராவது என்னைப் பார்க்கிறார்கள் என்றால் சட்டென்று கண்களைத் தாழ்த்திக்கொள்கிற பழக்கம் எனக்குப் பதினாலு வருஷப் பழக்கம். பத்து வயசில் கன்னத்துப் பக்கம் ஒரு அரும்பு மாதிரி, சிரித்த வெள்ளைத் தேமல் விரிந்து கொடியாகிக் கிளைத்து உடம்பு முழுக்க, முகம் முழுக்க, இலை இலையாய், வெள்ளைப் பூவாய்ச் சிரிக்க ஆரம்பித்து என்னைச் சிரிக்க முடியாதபடி செய்துவிட்டது.

யார் பார்வைக்கும் படாமல் ஒதுங்கிப் போக வைத்தது. எத்தனையோ இரவுகள் என்னைத் தேம்பித் தேம்பி அழ வைத்தது. அழுதது நான் மட்டுமில்லை. கூடச் சேர்ந்து கண்கலங்க, விரக்தியாய் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த எனக்கு அம்மாவும் அப்பாவும். எனக்கு இப்படி நேர்ந்ததுக்குப் பிறகு அம்மா பவுடர் பூசிக் கொள்வதை நிறுத்திவிட்டாள். பூ வைத்துக்கொள்வதைக் குறைத்துவிட்டாள்.