பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சி.எம். முத்து

ஞ்சை - இடையிருப்பு கிராமத்தைத் தாய் மண்ணாய்க் கொண்ட முத்து, தான் உண்மையான கலைஞன் என்பதை 'நெஞ்சின் நடுவே', 'கறிச்சோறு' ஆகிய நாவல்கள் மூலம் நிரூபித்துக் கொண்டார்.

மேலத்தஞ்சை வாழ்மக்களின் - குறிப்பாக கள்ளர் மரபினரின் வாழ்க்கையோடு அந்த மண்ணின் மணத்தையும் பொய்மை கலவாது முத்து வெளிப்படுத்திய கலைவடிவம் படிப்பவரைத் தன் வயப்படுத்திக் கொள்ளும் என்று சொன்னால் மிகையில்லை.

எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். நாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு நாட்டுப்புறக்கலையை மேடையேற்றினாலும் சிறுகதை வடிவத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்திருக்கிறார்.

இந்தியா டுடே முதலாம் இலக்கிய ஆண்டு மலரில் திரு. வெங்கட்சாமிநாதன் இப்படிக் கூறுகிறார். "அறுபது ஆண்டு கால இலக்கிய வரலாற்றில் திராவிட பாரம்பரியத்தில் எழுத வந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உட்படவும் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். அதனால் தான் உலகத் தரத்தை எட்டமுடியாமல் போய்விட்டது. இது தமிழ்மொழிக்கு நேர்ந்த ஆபத்து. தமிழ்நாட்டு சி.எம். முத்துவால் மட்டுமே அந்த வெற்றிப் பாதையை அடைய முடிந்தது. சாதி பற்றிய விஷயங்களை கலாப்பூர்வமாக சொல்லமுடியும் என்று சாதித்துக்காட்டிய அவரை தமிழகம் கவனிக்காதது அவருக்கு நேர்ந்த துரதிஷ்டமல்ல. தமிழின் துரதிஷ்டம் என்றால் மிகையில்லை ...” என்று அவர் சொன்னது சி.எம். முத்துவைப் பொறுத்தவரை மிகையில்லை தான்.

ஆனால் வெங்கட் சாமிநாதன் திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது சந்தேகப்படுவதும் கொச்சைப்படுத்துவதும், ஓரவஞ்சனையே.