பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

307


இல்லாட்டி சோத்துப் பையில கிளிஞ்சி போயிரும். “ராஜபார்ட்டா வேசம் கட்டிக்கிட்ட கரம்பத்தூரு கலியனுக்கு ஒத்தபன மாரியப்பன் மாமன் மொறைன்னு செஞ்சது மாலையும், அரப்பவுனு மோதரமும்”. இந்தக் கூத்து முடிஞ்சப்புறம் பின்னயும் நாடாவம் தொடரும். எப்புடிக்கின்னா, மறுவடியும் ஆரம்பிச்ச எடத்துலருந்தே ராஜா கேப்பாரு. “மந்திரி... நமது நாடு நகரத்தில் மாசம் மும்மாரி பொழியுதா?” இப்ப மந்திரி பேசமாட்டாரு. ராஜாவுக்கு புரியுமா மந்திரி படு எரிச்சல்ல இருக்காருன்னு. அவுருக்கு என்னடா ராஜா சொன்ன வசனத்தையே திருப்பி திருப்பி பேசிகிட்டிருக்காரேன்னு கோவம்ன்னா நெனச்சீங்க. அதுதான் இல்லன்னன். பின்ன கோவத்துக்கு...? ராஜாவுக்கு செய்வினையை மொறையுள்ளவன் நாலு பேருத்துக்கு முன்னாடி வச்சி செஞ்சிபுட்டு போயித்தான் தனக்கு செய்ய வேண்டிய மொறக்காரன் வந்து செய்யலியே அப்டிங்குற கோவந்தான். முன்னாடியே உள்ளுக்குள்ள ஏத்தி வச்சிருக்குற சாராயம் வேற ஊச்சத்துல நிக்கிறதா உப்புன்னு சொல்றதா, புளின்னு சொல்றதான்னு பல்லக் கடிச்சிக்கிட்டு நிப்பாரு மந்திரி.

‘வசனத்த மறந்துப்புட்டாரா மந்த்ரி?’ன்னு தங்கசாமி எரிச்சலாயிருக்கறப்பத்தான ராஜா சமயோசிதமா வசனத்த மாத்தி, “மந்திரி ஏமேல கோவமா... கேட்டதுக்கு ரொம்ப நாளியா வதுலு வரலியே என்னா காரணம் சொல்ல முடியுமா?”ன்னு கேக்க, மந்திரி வெகு கடுப்பாயி, "ஓங்க மேல என்னா ராசா எனக்கு கோவம்... ஓங்க மாமன் அக்கறையா. வந்து செய்வினையை செஞ்சிபுட்டு போயித்தாரு. ஏ மாமன் வரலியே அப்டிங்குறதுலதான் கோவம். செய்வினையை வாங்கிக்காம மட்டும் வசனத்தப் பேசுறாப்ல இல்ல. இப்டி தான் ஏ மாமன அவுமானப்படுத்தணும்” அப்படின்னு எரிச்சலா சொல்லிக்கிட்டிருக்கப்பதான் அவுரு மாமன் புத்தில் ஓரச்சிப்போயி வேட்டி அவில அவில மேடைக்கி ஓடியாருவாரு. வாழ எலையில சுத்திவச்சிருக்குற மாலைய அவுக்குறப்ப அவசரத்துல பாதிப்பூவு கொட்டிப் போயி நாராருக்கும். அத கழுத்துல போட்டுட்டு சட்டப்பையில ஒம்போது பேப்பரு சுத்தி பதுவுசா மடிச்சி வச்சிருந்த ஒரு பவுனு சங்கிலிய எடுத்து மந்திரி கழுத்துல மாட்டிப்புட்டு தங்கசாமிய பாப்பாரு. தங்கசாமி புரிஞ்சிகிட்டு மைக்குக்கு முன்னாடி ஓடியாந்து “கொத்தங்குடி சின்ராசு கரம்பத் தூரு கருப்பையாவுக்கு செஞ்சது ரோசாப்பூ மாலை ஒன்னு. ஒரு பவுனு சங்கிலி” அப்டின்னு சொல்லி நிறுத்தி புட்டு கூட்டத்தப் பாத்து சொல்லுவாரு, “கூட்டத்துல செய்வன செய்யிறவுங்க இருந்தா வந்து செஞ்சிபுட்டு போயிருங்க... நாடாவத்த சட்டுபுட்டுன்னு முடிச்சாவணும். சூரியன் வந்து எழுப்பறவரைக்குமா நாடாவத்த நடத்திகிட்டிருக்க முடியும்? இப்பத்தானா ராசா நாடு நவரங்கள எளக்கணும்.